தமிழ்நாடு

”நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

”நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி 4,750 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும் முதலிடம் பிடித்தவர்களில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதும் தெரியவந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நீட் தேர்வில் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும், இது தொடர்பாக மாணவர்கள் முறையிட்டதால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மேலும் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

சமூகநீதிக்கு எதிரானவை.

தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories