தமிழ்நாடு

”கேரள அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது” : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது எனகே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

”கேரள அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது” : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. இதற்கு மாறாக புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது.” CPM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளில் முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டுமானால் கேரளம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநில அரசுகளும் ஒருமித்த முடிவுக்கு பின்னரே கட்ட முடியும் என குறிப்பிட்டதோடு தமிழ்நாட்டின் மீது புதிய அணையை கேரள அரசு திணிக்க முடியாது என கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 2018ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்தபோது தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு உச்சநீதிமன்றத்தினுடைய அனுமதி தேவை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் கேரள அரசின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு 28.5.2024 அன்று நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பிட்டுக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும். எனவே, கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவும் இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் தமிழகத்தின் பாசன உரிமையை பாதிக்கும் என்பதோடு இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து சட்ட ரீதியான மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வரவேற்கிறது.

சிலந்தியாறு தடுப்பணை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவி குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட வட்டவடா ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக இப்பகுதியில் ஓடும் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மலை கிராம ஊராட்சிக்கு குடிநீர் வழங்கிட ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிலந்தியாறு உட்பட அமராவதி அதன் கிளை நதிகள் அனைத்தும் காவிரி பாசனத்தோடு இணைந்தவையாகும். இப்பாசன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கலந்துபேசி ஒத்தக் கருத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டுமென காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, கேரள அரசு இத்தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசு அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னரே தடுப்பணை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories