தமிழ்நாடு

“நீங்கள் நலமா” : இன்று தொடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?

“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

“நீங்கள் நலமா” : இன்று தொடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு அலுவலரின் பொறுப்பாகும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறார்.

அவ்வகையில், தமிழ்நாடு அரசு ஏழை எளிய விளிம்புநிலை பொதுமக்கள் பயனடைந்திட, ஆணுக்கிங்கே பெண் நிகர் என்னும் சமத்துவப் பாதையில் குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, ஏழை, எளிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்து உறுதி செய்திடும் “புதுமைப் பெண் திட்டம்”, உலகை வெல்லும் இளைய தமிழகத்தை உருவாக்கிட கல்லூரிப் படிப்புடன் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிடும் “நான் முதல்வன் திட்டம்”, மாபெரும் சமூக மாற்றத்திற்கான புதிய தொடக்கமாக பள்ளி செல்லும் குழந்தைகள் களைப்பின்றி பயில “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்திட “விடியல் பயணம் திட்டம்”, மாநிலம் முழுவதும் வேறு மாவட்டங்களிலிருந்து வந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகத் “தோழி” தங்கும் விடுதிகள், போன்ற பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறும், “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மயிலாடுதுறையில் 4.3.2024 நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படும். அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும். அதன் அடுத்தகட்டமாக பொதுமக்களுக்கு அரசுத் துறைகளால் வழங்கப்படும் இதர சேவைகளின் மீதும் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் பின்னூட்டங்கள் இதற்கென உருவாக்கப்படும் “நீங்கள் நலமா“ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வலைத்தளம் மக்களின் கருத்துகளைப் பெறும் ஒரு திறந்தவெளி அமைப்பாகச் செயல்படும். மேலும், இவ்வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

“நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்து, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்” பயன்பெற்ற சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையைச் சேர்ந்த திருமதி தனலட்சுமி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திருமதி தனலட்சுமி அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்து, முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்” பயன்பெற்று வரும் திருவள்ளூர், சோரஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் பவனேஷின் தந்தை திரு. பிரபு அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அச்சிறுவனின் தந்தை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது என்றும், பள்ளிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு தனது மகன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மகனுக்கு காலை உணவு தயார் வேண்டிய நிலை இல்லாத காரணத்தால் எனது மனைவியும் தற்போது பணிக்கு செல்கிறார் என்று முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், UPSC போட்டித் தேர்விற்கான நேர்முக தேர்வு பயிற்சி பெற்று வரும் செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த திரு. கதிரவன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, திரு. கதிராவன் அவர்கள், 2019-ஆம் ஆண்டு BE Civil Engineering முடித்து, குடிமைப்பணி தேர்வுக்காக படித்து கொண்டு வருவதாகவும், தற்போது UPSC (Main Exam) முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்ததாக நேர்முகத் தேர்விற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற்று வருவதால் கவலையின்றி படித்து வருவதாகவும், இத்திட்டத்தினை கிராமப்புற மாணவர்களும் அறிந்து கொண்டு, அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

“நீங்கள் நலமா” : இன்று தொடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் - 5 முக்கிய அம்சங்கள் என்ன?

“புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி செல்வி நஸ்ரின் அவர்களை முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவி நஸ்ரின், தற்போது தான் ராஜேஸ்வரி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் BA (ஆங்கிலம்) இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருவதாகவும், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது படிப்பிற்கு தேவையான செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பணிபுரியும் மகளிருக்கான விடுதி திட்டமான “தோழி” திட்டத்தின் கீழ் அடையார் தோழி விடுதியில் தங்கி பயன்பெற்று வரும் சீர்காழியைச் சேர்ந்த திருமதி ஸ்வாதி முரளி அவர்களை முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, திருமதி ஸ்வாதி முரளி அவர்கள், தங்கும் விடுதி ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாகவும், விடுதி பாதுகாவலர் கனிவோடு அனைவரையும் நடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் மகளிர் விடுதியைவிட மிகக் குறைந்த கட்டணத்தில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்தார்.

“தோழி” விடுதிகளை பெண்கள் பயன்பெறும் வகையில் ஒரு நல்வாழ்வு மகத்துவ மையமாக (Wellbeing Centre) மாற்ற முதலமைச்சர் அவர்களிடம் திருமதி ஸ்வாதி முரளி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆவன செய்வதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மனு சமர்ப்பித்து காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளால் பயன்பெற்ற திருத்தணியைச் சேர்ந்த திரு.ஜெ.கே. குமார் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திரு. குமார் அவர்கள் காணாமல் போன தனது மகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டு, பின்னர் தன்னிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரு. குமார் அவர்களிடம், மாணவிகளுக்காக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories