புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் அச்சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்த பெற்றோர் சிறுமி கிடைக்காததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சோலை நகர் பகுதியில் கால்வாயில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரித்தபோது அதுமாயமான சிறுமிதான் என்பது உறுதியாது.
இதையடுத்து சிறுமியை யார் கொலை செய்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்குள் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுமி கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களை போலிஸார் தடியடி கொண்டு விரட்டியடுத்தனர். பின்னர் சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என புதுச்சேரி சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.