தமிழ்நாடு

“பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை...” : செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம் !

சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய தமிழ்நாட்டில் பாஜகவின் பொய் செல்லுபடி ஆகாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

“பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை...” : செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

அப்போது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “மோடி அரசு 10 ஆண்டுகளில் என்னென்ன அறிவித்தார்? என்னென்ன செய்தார்?. ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் என்னவென்றால் உழைக்கும் மக்களை இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களை ஒழிக்க வேண்டும்; வரலாற்றை உண்மைக்கு புறம்பாக திணிக்க வேண்டும் என்பதுதான்.

கடந்த 2013 ஆம் ஆண்டு கடல் தாமரை என்று மாநாட்டை நடத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியாக ஒரு அமைச்சகம் அமைப்போம், மீனவர்கள் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையை எல்லையில் நிறுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் இப்போது நிலைமை என்ன? மீனவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படாது, மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.

“பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை...” : செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம் !

மீனவர்கள் இலங்கை பாகிஸ்தான் கடற்படை நம் மீனவர்களை தாக்குவதும் வலைகளை கிழிப்பதும் பெட்ரோல் குண்டுகளால் தாக்குவதும் மோடி அரசு பாதுகாக்கிறதா? வாக்குறுதிகள் நிறைவேற்றியதா? எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள் பட்டியலின மக்களை ஏமாற்றுகிறார்கள் மீனவர்களை நசுக்குவது முதன்மை கட்சியாக பாஜக விளங்கி வருகிறது.

பாஜக ஆட்சி வந்தால் ஒரு உயிர் கூட போகாது என்று சொன்னார்கள். இலங்கை கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர். இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மோடி ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக இருக்கிறார்கள். விரட்டி அடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறோம், நீங்கள் இயந்திரங்களை நம்பி தேர்தலில் களமிறங்குகிறீர்கள். திருட்டும் புரட்டும் முடிவுக்கு வரும் காலம் வெகு விரைவில் நடக்க இருக்கிறது.

பாஜக எம்பிகள் இல்லாத பகுதிகளில் மாற்றான் தாய் மனப்பான்மையாக நடந்து கொள்கிறார்கள். மீனவர்களை ராகுல் காந்தி பாதுகாப்பார் என உறுதியாக நம்புகிறோம். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் சேர்த்து வைத்த செல்வங்களை பாஜக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

பால் விலை, பெட்ரோல், எரிவாயு விலையை பாதியாக குறைப்பேன் என்றார் மோடி. ஆனால் என்ன நடந்தது? இந்திய பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு இணையாக உயர்த்துகிறேன் என்று சொன்னீர்களே செய்தீர்களா? ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு மாடல் உள்ளது.

திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஆனால் உங்கள் (பாஜக) ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. இஸ்லாமியர்களை விரட்ட நினைக்கிறீர்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் ஏமாற்றலாம் சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய தமிழகத்தில் உங்கள் பொய் செல்லுபடி ஆகாது. இரண்டாவது சுதந்திரத்திற்கு இந்தியா தயாராக உள்ளது. மே மாதத்திற்கு பிறகு உங்கள் வேலை இங்கு நடக்காது" என்றார்.

banner

Related Stories

Related Stories