தமிழ்நாடு

சண்டிகர் தேர்தல் முறைகேடு : “ஏன் வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எழுதினீர்கள்?” - நீதிபதி கேள்வி !

வாக்கெடுப்புகளில் குதிரை பேரம் நடப்பது மிகவும் கவலை அளிப்பதாகவும், தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சண்டிகர் தேர்தல் முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் தேர்தல் முறைகேடு : “ஏன் வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எழுதினீர்கள்?” - நீதிபதி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் என்பவர் போட்டியிட்டார். அதேபோல பாஜக சார்பில், மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டார். ஆனால் இந்த மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக கருத்துகள் வெளியானதையடுத்து, தோல்வி பயத்தில் 2 முறை மேயர் தேர்தலை ஒத்திவைத்தது ஒன்றிய பாஜக அரசு. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த கடந்த ஜனவரி 30-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், மொத்தம் பதிவான 36 வாக்குகள் பதிவான நிலையில், அதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

சண்டிகர் தேர்தல் முறைகேடு : “ஏன் வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எழுதினீர்கள்?” - நீதிபதி கேள்வி !

இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் ஆணையர் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி விமர்சித்தது.

மேலும் இந்த விவகாரம் குறித்தும், பாஜக வெற்றி செல்லாது என்று அறிவிக்குமாறும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து நீதியை நாடி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தது.

அதோடு சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் மற்றும் ஜனநாயகப் படுகொலை என்றும் வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்த தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, மறு உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டது.

சண்டிகர் தேர்தல் முறைகேடு : “ஏன் வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எழுதினீர்கள்?” - நீதிபதி கேள்வி !

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசி நேரில் ஆஜரானார். அவரிடம் தலைமை நீதிபதி அமர்வு நேரடியாக கேள்விகளை எழுப்பியது. அதற்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டுகளில் குறியீட்டை பதிவு செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

அப்போது நீதிபதிகள், “நான் இப்போது சில கேள்விகளை உங்களிடம் (தேர்தல் அதிகாரி) கேட்க போகிறேன் உண்மையாக பதில் அளிக்கவில்லை என்றால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும். இது ஒரு மிகவும் முக்கியமான மற்றும் தீவிரமான விஷயம். தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து நீங்கள் செய்தவற்றை காணொளியை பார்த்தோம். வாக்குச் சீட்டுகளில் எழுதும்போது கேமராவைப் பார்த்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் வாக்குச்சீட்டுகளில் பேனாவைக் கொண்டு எழுதினீர்கள்?

இது ஜனநாயகத்திற்கு மிக மோசமானது. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அந்த குறியீடுகளை பதிவு செய்தீர்கள்? உங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.” என்றார். தொடர்ந்து அனைத்து வாக்குச் சீட்டுகளையும், வீடியோ காட்சிகளையும் நாளை காலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர், வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், குதிரை பேரம் நடப்பது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே வழக்கை விரைந்து விசாரிக்கப் போவதாகக் கூறினர். தேர்தல் அதிகாரி அனில் மசி நாளை மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories