தமிழ்நாடு

"வகுப்பு எடுத்த ஒன்றிய அமைச்சர் கடைசி வரை நிதி மட்டும் வழங்கவில்லை" - அமைச்சர் உதயநிதி கிண்டல் !

"வகுப்பு எடுத்த ஒன்றிய அமைச்சர் கடைசி வரை நிதி மட்டும் வழங்கவில்லை"  - அமைச்சர் உதயநிதி கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பாக முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பகுதி வட்ட செயலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பரிசினை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் காரணமாக களத்தில் நின்று நான் மக்களுடன் மக்களாய் இருந்தேன். அதேபோல் வெள்ள நீர் வடிந்த பின்பு தான் நான் பிற மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றேன். குறிப்பாக எனக்கு பல பட்ட பெயர்கள் இருந்தாலும் சேப்பாக்கத்தின் செல்ல பிள்ளை என்கின்ற பட்டப்பெயர் தான் என்றும் எனக்கு மிகவும் பிடித்த பெயர்.

ஒன்றிய பாஜக அரசு ஏழரை லட்சம் ரூபாய் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. குறிப்பாக பாஜக அரசு கணக்கு காட்டிய சாலை போடுவதில் ஒரு கிலோ மீட்டருக்கு 280 கோடி செலவு கணக்கு காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து 9 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வரி பணமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு நமக்கு திருப்பி அளித்தது வெறும் இரண்டரை லட்சம் கோடி தான். உத்தரப்பிரதேசம் மாநில பொருத்தவரையில் வரியாக கொடுத்தது 3 லட்சம் தான். ஆனால் அந்த மாநிலத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழரிடமிருந்து ஒன்றிய அரசு ஒரு ரூபாய் வரியாக பெற்றால் அதனை திருப்பி வழங்குவது வெறும் 23 பைசாவாக மட்டும் தான் உள்ளது.

"வகுப்பு எடுத்த ஒன்றிய அமைச்சர் கடைசி வரை நிதி மட்டும் வழங்கவில்லை"  - அமைச்சர் உதயநிதி கிண்டல் !

இது தொடர்பாக நான் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கேட்ட பொழுது கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலுக்கு தான் நான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா தருகிறீர்கள் என்று கேட்டேன். உடனே நான் என்னென்ன பாஷைகளில் பேச வேண்டுமென எனக்கு அவர்கள் வகுப்பு எடுத்தார்கள். ஆனால் கடைசி வரை அவர்கள் நிதி ஒன்றும் வழங்கவில்லை.

அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடர்பாக ஒன்றிய பிரதமரையும் பார்க்கச் சென்று இருந்தேன். அதற்கான அழைப்பிதழை கொடுத்தவுடன் இரண்டாவது கேள்வியாக நிதி எப்போது கொடுப்பீர்கள் என்று தான் கேட்டேன். இந்த வெள்ளத்தின் பொழுது ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் நமது தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கி உள்ளார் நமது முதல்வர்.

இப்படியாக இந்த மாதம் மட்டும் தமிழக மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிறப்பான பலத்த திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்து வருபவர் நமது முதல்வர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையேயான போட்டி யார் முதலில் உள்ளே செல்வது என்பதுதான். அதிமுகவை பொறுத்தவரையில் மக்களுக்காக எந்த ஒரு கவலையும் அவர்கள் பட்டது கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் பொதுக்குழு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள் என்று கூறினார். ஆமாம் உண்மைதான் அந்த மாநாட்டில் போட்ட புளிசாதம், தக்காளி சாதத்தை பார்த்து தான் அனைவரும் பயந்து தெரிந்து ஓடினார்கள்.

வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்க உள்ளார்கள். அதை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை எனில் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. தற்பொழுது அந்த கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமரை வரக்கூடாது என நான்கு சாமியார்கள் கூறுகிறார்கள் ஏனென்றால் அவர் பிற்படுத்தப்பட்டவராம் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான நோக்கங்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம்.

banner

Related Stories

Related Stories