குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்த கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்துச் செல்லப்பட்டது. இதை முன்கூட்டியே தெரிந்ததால் 800 பயணிகளுடன் திருச்செந்தூரிலிருந்து சென்னை புறப்பட்ட ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் 800 பயணிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து அறிந்த உடன் ரயில்வே துறை மற்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகம் அவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டது. முதற்கட்டமாக சுமார் 300 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை உதவியுடன் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மாட்டிக் கொண்டு 800 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் ரொட்டி, அரசி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அங்கு ரயில்வே ஊழியர்கள் கூடுதலாக வரவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த ரயிலில் சிக்கிக் கொண்ட அனுசுயா என்ற கர்ப்பிணி பெண்ணும், ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் அனுசுயா முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரயில் நிலையத்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை அழைத்துச் செல்வதற்காக 13 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிட 10 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவினர் நேற்றிலிருந்து மீட்பு களத்திலிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.