தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் மாணவர்கள் விடுமுறைநாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பின்வருமாறு :

"பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !

6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !

13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.

16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !

21. பள்ளிகளில் இடிக்கபட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது."

banner

Related Stories

Related Stories