புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்திற்கான பதிவு முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை எவ்வளவு ஊழல் பட்டியல் வெளியிட்டாலும் இது தி.மு.கவை எந்த விதத்திலும் பாதிக்காது. அமைச்சர்கள் உள்ளிட அனைவரும் சட்ட ரீதியாகச் சந்திப்பார்கள். அண்ணாமலையின் நடைபயணத்தால் தி.மு.காவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவரது அரசியல் காரணத்திற்காக நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தால் அவருக்குக் கால்வலிதான் மிச்சமாகும். வேறு எந்த மாற்றமும் ஏற்படாது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டபோது அதில் ஒரு எழுச்சி இருந்தது. மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் அண்ணாமலை கூட்டத்தைக் கூட்டிக்கொண்டுதான் நடைபயணம் செல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.