அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.கவின் ஜனநாயக விரோத மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், :"அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இதன் உண்மையான நோக்கம் செந்தில் பாலாஜி இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர்தான் அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த கைது நடவடிக்கை.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் அனைத்து எதிர்கட்சிகளும் ஒரு அணையில் திரண்டு வருகிறது. இது பா.ஜ.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என முதலில் சொன்னவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இதனால்தான் புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்கட்சிகளை நெருக்கடி கொடுத்து வருகிறது மோடி அரசு.
பா.ஜ.கவின் செயலாளர் போல் ஆர்.என்.ரவி நடந்து வருகிறார். ராஜ்பவன் ஆளுநர் மாளிகை அல்ல ஆர்.எஸ்.எஸ் மாளிகை. திருப்பி அடித்தால் உங்களால் தாங்க முடியாது என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சரின் முழுமையான ஆற்றல் தெரியாமல் பாஜகவினர் சீண்டி பார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.