தமிழ்நாடு

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

இன்றைக்கு நான் உயிரோடு, இந்த மேடையில் நின்று பேசுகிற வாய்ப்பு எனக்கு இருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் அண்ணன் சிட்டிபாபுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.5.2023) பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்.1-க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “தமிழ்நாட்டு மக்களுக்குரிய வகையில் அனைவருக்குமான முதலமைச்சர் என்கின்ற அந்த பொறுப்பில் நான் இருந்தாலும், நான் முதலமைச்சராக அந்த பொறுப்புக்கு வருவதற்கு காரணமாக இருந்த கொளத்தூர் தொகுதி மக்களாகிய நீங்கள் அளித்த மகத்தான வெற்றிதான். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, ஹாட்ரிக் அடிக்கக்கூடிய வகையில் மூன்று முறை தொடர்ச்சியாக, என்னை வெற்றி பெற வைத்திருக்கக்கூடியவர்கள் நீங்கள் தான். அதில் இரண்டு முறை எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அதைத் தொடர்ந்து என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையின் காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுத்து என்னை முதலமைச்சராகக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி தந்திருக்கிறீர்கள்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னால், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று பல பணிகளை செய்து, ஆய்வுகளை செய்து, திட்டங்களைத் தொடங்கி வைத்து, அந்த பணிகளை எல்லாம் தொடர்ந்து நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதை நீங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போது, கடமைகளை நிறைவுசெய்துவிட்டு, ஒரு வீட்டிற்குள்ளே நுழைவது போல எனது வீட்டிற்குள்ளே நுழைவது போல, நிம்மதியை, ஒரு மனநிறைவை, மகிழ்ச்சியை, பூரிப்பை, புலங்காகித உணர்வை என்னையும் அறியாமல் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

எங்களுக்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் உரிமையோடு கேட்கக்கூடியவர்கள் இந்த கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள். அந்த உரிமையின் அடையாளமாகத்தான் இன்று கொளத்தூர் தொகுதியில் வரிசையாக பல திட்டங்களை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். அதில் குறிப்பாக, போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கக்கூடிய வகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 61 கோடியே 98 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான இந்த மேம்பாலம் மேயர் சிட்டிபாபு அவர்கள் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

இது கொளத்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. முதன்முதலாக கொளத்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இந்த கோரிக்கை வலுவாக, அழுத்தமாக என்னிடத்தில் எடுத்து வைக்கப்பட்டது, என்னுடைய கவனத்திற்கு வந்தது. காரணம், ரயில்வே கேட் மூடப்படுவதால், 15 நிமிடத்திற்கு ஒரு முறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால், மக்களுடைய பணிகள் பாதிக்கப்படுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்து, 2014-ஆம் ஆண்டு, அதாவது ஆதாரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், 30.11.2014 அன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு எல்சி-1 கேட் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு பிறகு தொடர்ச்சியாக, 2015-ஆம் ஆண்டிலும், அது வலியுறுத்தப்பட்டது. மேலும், மேலும் தொடர்ந்து அதை நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், உடனடியாக சென்னை மாநகராட்சியின் அனுமதி அப்போது கிடைக்கவில்லை என்ற பதில் எங்களுக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளரிடமிருந்து வந்தது. 2015-இல் யாருடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அதை பற்றியெல்லாம் நான் ஒரு நல்ல நிகழ்ச்சியில் விமர்சிக்க விரும்பவில்லை.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

ஆனால், ஆட்சி யாருடையதாக இருந்தாலும், மக்களுக்குப் பாடுபடும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்கிற காரணத்தால், அதிலும் குறிப்பாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் ஆளும் கட்சியாக இல்லை, அதற்காக விட்டுவிடாமல், எதிர்க்கட்சியாக இருந்த அந்த நேரத்தில் அன்றைய ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்பிரபு. அப்போதெல்லாம் இரயில்வே பட்ஜெட் உண்டு. அதனுடைய விவாதமும் நாடாளுமன்றத்தில் உண்டு.

அந்த சூழ்நிலையில், அந்த துறையினுடைய அமைச்சர் திரு. சுரேஷ்பிரபு அவர்களிடத்தில் நேரடியாக சென்று நான் வலியுறுத்தி சொன்னேன். அதற்கு பிறகு என்னுடைய கோரிக்கையை உணர்ந்து, நியாயம் என்பதை தெரிந்து, புரிந்து அவர் நான் எடுத்த வைத்த வாதத்தையெல்லாம் ஏற்றுக்கொண்டு, அப்போது நடைபெற்ற ரயில்வே பட்ஜெட்டில் 7.35 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவித்தார்கள். அது எல்லாம் ரெக்கார்டில் இருக்கிறது.

உங்களின் சட்டமன்ற உறுப்பினராக நான் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி இப்படிப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறீர்கள் என்று சொல்லி, ராஜாஜி நகர் நல்வாழ்வு சங்கத்தினர், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்கு நன்றி கடிதத்தைகூட என்னுடைய சட்டமன்ற உறுப்பினருடைய அலுவலகத்திற்கு 6.3.2015 அன்று அனுப்பி வைத்திருந்தார்கள்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

என்னைப் பொறுத்தவரைக்கும், நான் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்கக்கூடியவன் அல்ல. அப்போது மட்டும் உங்களையெல்லாம் சந்தித்து பேசுபவனல்ல. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், “பேசலாம் வாங்க” என்ற தலைப்பில் நம்முடைய தொகுதி முழுவதும், அனைத்து வட்டங்களிலும், தொகுதி மக்களுடைய தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்பதை நேரடியாக மக்களிடத்தில் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து, “பேசலாம் வாங்க” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தினோம். அதையெல்லாம், அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் நிறைவேற்றும் வாய்ப்பில்லை. அதில் எதை, எதையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அந்த அதிகாரிகளை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சிகளை நாம் நிறைவேற்றினோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

2015 ஏப்ரல் 19 அன்றும், ஏப்ரல் 25 அன்றும் நடந்த “பேசலாம் வாங்க” நிகழ்வின் போது, எல்.சி.1 பாலப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். 30.4.2015 அன்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் திரு.அசோக் அகர்வால் அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பி வைத்தோம். அதன்பிறகு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுநல சங்கத்தினர் சார்பிலும் கடிதங்கள் எல்லாம் ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு, 14.9.2017 அன்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய கடிதம் மூலமாக எல்.சி.1 ரயில்வே மேம்பாலத்திற்கான சென்னை மாநகராட்சியின் ஒப்புகை அளிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 2017-ல் அதற்குரிய அனுமதி கிடைத்தது.

இந்தத் தொகுதியினுடைய முக்கியமான தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 2014-ல் ஆய்வுப் பணியை மேற்கொண்டோம். 2017-ல் ஆய்வுப் பணியை தொடர்ந்து மேற்கொண்டோம்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

அதற்கு பிறகு ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 சதவீதம், 50 சதவீதம் இந்த செலவினைப் பகிர்ந்துகொண்டு, மேற்கொள்ளும் இந்த மேம்பாலப் பணிக்கு 31.10.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. எப்போது தொடங்கி, எப்போது வருகிறது பாருங்கள். ஆனாலும் பணிகள் விரைவாக நடைபெற்றதா? இல்லை, தாமதமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.

அதற்கு பின்னால், 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கழகம் மிகப் பெரிய வெற்றியை பெற்று, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தக் கனவு, இந்த பாலம் கட்டக்கூடிய கனவு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி, பணிகளை வேகப்படுத்தியதன் காரணமாக, மேம்பாலப் பணிகள் நிறைவு கட்டத்திற்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதியன்றுகூட மேம்பாலப் பணிகளை நான் ஆய்வு செய்தேன்.

உங்களின் நீண்டகால கனவு, இன்று நனவாகியிருக்கிறது. இது கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருக்கக்கூடிய வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கும் பெரும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நம்முடைய அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும், நம்முடைய அமைச்சர் திரு.நேரு அவர்களும் என்னிடத்தில் கேட்ட நேரத்தில், உடனே சொன்னேன். மேயர் சிட்டிபாபு பெயர் சூட்டவேண்டும் என்று நான் சொன்னேன்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

பெரம்பூர் மேம்பாலம் வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் மேயராக இருந்தபோது 10 பாலங்களை கட்டவேண்டும் என்று சொல்லி, இங்கே திரு.நேரு அவர்கள் பேசுகிறபோது சொன்னார். 10 பாலங்களை கட்டுவதாக முடிவு செய்து, 9 பாலங்களை கட்டி முடித்தோம். அதுவும் குறித்த நேரத்திற்கு முன்பே. மிச்சப்படுத்திய தொகையை கூட கொஞ்சம் குறைத்து சொல்லிவிட்டார். 9 கோடி ரூபாய் என்று சொன்னார். 94 கோடி மதிப்பிலான பாலங்களை கட்ட 33 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கிறோம். ஒரு வருடத்தில் கட்டவேண்டிய பாலத்தை 10 மாதத்தில் கட்டிமுடித்தோம்.

இன்றைக்கு சென்னை மாநகரத்தில், அந்த பாலங்கள் எல்லாம் இல்லையென்றால், பாலங்கள் இருந்தே போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்றால், பாலங்கள் இல்லையென்றால் என்னென்ன நிலையில் இருக்கும், சிந்தித்துப் பாருங்கள். முதன்முதலில் சென்னையில், மேம்பாலம் என்று கட்டியதே அண்ணா மேம்பாலம்தான், தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது. அந்த அண்ணா மேம்பாலம் இல்லையென்றால், என்ன நிலை? அண்ணா இல்லையென்றாலே நம்முடைய நிலை வேறு நிலையில் போயிருக்கும். அண்ணா மேம்பாலம் இல்லையென்றால் என்ன நிலை அதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த 10 பாலங்களை நான் மேயராக இருந்தபோது கட்டிய நேரத்தில், அதில் ஒரு தொழில்நுட்ப பிரச்சனை வந்தது, எதில் பெரம்பூர் மேம்பாலத்தில். இங்கே இருக்கக்கூடிய திரு. ரங்கநாதனுக்கு நன்றாக தெரியும்.

நம்முடைய மத்திய அமைச்சராக இருந்த, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மதிப்பிற்குரிய மறைந்த நம்முடைய முரசொலி மாறன் அவர்கள், எல்லாவற்றையும் கட்டிவிட்டீர்கள், இதை கட்டவேண்டும், கட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். என்ன தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தாலும் பரவாயில்லை, அது சரி செய்யவேண்டும், சரி செய்யவேண்டும் என்று சொல்லி, அவரே டெல்லிக்கு பலமுறை சென்று, அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி, ஆய்வு நடத்தி, அதற்கு பிறகு ஆட்சி போய்விட்டது.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

வேறு ஆட்சி வந்தது. அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி வந்தது. ஆட்சிக்கு வந்த அவர்கள் கட்டி முடித்திருந்தால் 2 மாதத்திலோ, 3 மாதத்திலோ கட்டி முடித்திருக்கலாம். கவலைப்படவில்லை. அதை விட்டுவிட்டார்கள். நம் மீது வழக்கு போட்டார்கள். அந்த பாலத்தில் ஊழல் நடந்தது. வழக்கு போட்டார்களே தவிர, இன்னும், FIR-கூட போடவில்லை. அதுதான் அந்த வழக்கு. எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த பாலங்கள் கட்டுகிற நேரத்தில், அந்த 10-வது பாலம் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கலை நம்முடைய மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்கள் தான் அதை தீர்த்து வைத்தார். அதற்கு பிறகு, அந்த அடிக்கல் நாட்டு விழா எங்கே நடந்தது தெரியுமா? அந்த பெரம்பூர் பாலத்துக்கு அருகிலேதான் நடந்தது. முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர்தான் அடிக்கல் நாட்டி வைத்தார். 9 பாலங்களை திறந்து வைத்தார்.

அந்த பாலத்தில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால், காலம் தாழ்ந்து போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் செய்து முடித்திருக்க வேண்டும், கவலைப்படவில்லை. அதற்கு பிறகு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்து, யார் அடிக்கல் நாட்டி வைத்தார்களோ, அதே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த பாலத்தை திறந்து வைத்தார். அதுதான் வரலாறு.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

அப்போது மேடையில் முதலமைச்சர் கலைஞரிடத்தில், மேயராக இருந்த நான் இந்த விஷயத்தை, இந்த வரலாறையெல்லாம் எடுத்துச் சொன்னேன். மறைந்த மாறன் அவர்கள் தான் இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்தால் என்று சொன்னவுடன், அந்த பாலத்திற்கு கீழே இருக்கக்கூடிய பூங்காவிற்கு முரசொலிமாறன் பூங்கா என்று பெயர் சூட்டினார். மேடையிலே சொன்னார். முரசொலிமாறன் அவர்கள் பாலம் வருவதற்கு காரணமாக இருந்தாரோ, அதுமாதிரி, இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்த இன்றைக்கு நான் உயிரோடு, இந்த மேடையில் நின்று பேசுகிற வாய்ப்பு, முதலமைச்சராக இருந்து, மக்களுக்கு ஆற்றுகிற அந்த கடமை, இந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அண்ணன் சிட்டிபாபுதான். நான் அதைத்தான் நினைத்துப் பார்த்து உடனே அவர் பெயரை சொன்னேன்.

இன்றைக்கு அவருடைய பெயரால், மேயர் சி.சிட்டிபாபு என்ற அந்த பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாலத்திற்கும் பெயர் வைப்பது உண்டு. எத்தனையோ பாலங்களை பார்க்கிறோம். அதுமாதிரி ஒரு தியாக மறவராக, தியாக செம்மலாக, எமர்ஜென்சி காலத்தில் மிசா சிறையில் நான், முரசொலிமாறன் அவர்கள், மற்றவர்களெல்லாம் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களோடு அடைபட்டிருந்தவர் ஓர் ஆண்டு காலம் அண்ணன் சிட்டிபாபு அவர்கள்.

என் மீது விழ இருந்த அடிகளை அவர் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால், நான் இல்லை. நீங்கள் அந்த கண்காட்சியெல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த நன்றி உணர்வோடுதான் இன்றைக்கு உங்கள் முன்னால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று சொன்னால், அந்த நன்றி உணர்வு பெருக்கோடுதான் இந்த பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தவிர வேறு அல்ல.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

ஏறத்தாழ 10 வருடங்களாக இந்த பாலத்திற்காக நாம் காத்துக் கொண்டிருந்தோம். நாம் எதிர்பார்த்திருந்த திட்டம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அமையும்போதுதான் இத்தகைய திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 1996-ல் முதலமைச்சராக இருந்த நேரத்தில் சென்னை மாநகரத்தினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான் பொறுப்பேற்றபோது, பல உறுதிமொழிகளை அதிலும் குறிப்பாக சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கான உறுதிமொழி எடுத்தேன். அதையெல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் பின்னால் வந்தவர்கள் எப்படி சீரழித்தார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அதைத் தொடர்ந்து 2006-2011 கழக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்று நான் ஆற்றியிருக்கக்கூடிய பணிகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். சிட்டிபாபு பெயரில் இன்றைக்கு இந்த பாலம் அமைந்திருப்பது என்பது அது மக்களுக்கு பயன்படப்போகிறது என்பதை எண்ணிப்பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இன்னொரு செய்தியும் மறந்திருக்க மாட்டீர்கள், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறந்திருக்க மாட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை உரிய முறையில் திறந்துவிடாத காரணத்தினால், யாருடைய உத்தரவுக்காக காத்திருந்த காரணத்தினால், அந்த உத்தரவை பெறமுடியாத சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த காரணத்தினால், அது இயற்கை வெள்ளமில்லை, செயற்கை வெள்ளமே ஏற்பட்டது நம்முடைய சென்னை மாநகரத்தில். அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், மக்கள் பட்ட துன்பங்கள் இதையெல்லாம் எண்ணிப்பார்த்துதான் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நடந்திருக்கக்கூடிய ஊழல்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அதனால் சென்னையின் பல பகுதிகளில் மழையில் மிதந்தது. ஆனால், இப்போது கடந்த இரண்டாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியில் சென்னை எப்படி மாறியிருக்கிறது என்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள்.

“இன்றைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அண்ணன் சிட்டிபாபுதான்” : உருக்கமான நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்!

அந்த பணிகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும், சில பணிகள் மீதம் இருக்கிறது. அதையும் உடனடியாக நம்முடைய அமைச்சர் அவர்களும், மாநகராட்சி அதிகாரிகளும், மேயர், துணை மேயர் அவர்களும், மாநகராட்சி கவுன்சிலர்களும், வார்டு குழுத் தலைவர்களும் ஒருங்கிணைந்து அந்தப் பணிகளை எல்லாம் இன்னும் வேகப்படுத்தி, விரைவில் முடித்து சென்னை மாநகர மக்கள் எந்த மழை வந்தாலும், எந்த புயல் வந்தாலும், எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் தைரியமாக இருக்கிறோம், திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு தரவேண்டும். அதற்குரிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் பணியாற்றிடவேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள், நான் மேயராக பொறுப்பேற்றபோது, ஒரு கருத்தைச் சொன்னார். நான் மேயர் பதவி ஏற்கப்போகிறேன் என்று தலைவரிடத்தில் சொன்னபோது, ஒரு திருத்தம், மேயர் பதவி என்று சொல்லாதே, மேயர் பொறுப்பென்று சொல் என்று சொன்னார். சொல்லிவிட்டு சொன்னார், ஏன் பொறுப்பு என்று சொன்னேன் என்றால், மக்கள் உனக்கு தந்திருப்பது பதவி அல்ல, பொறுப்பு. எனவே பொறுப்போடு இருந்து உன் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று அறிவுரையாக எனக்கு வழங்கிய அந்த வார்த்தைதான் எனக்கு எப்போதும் நினைவில் இருக்கிறது. நான் அதைத்தான் தொடர்ந்து அமைச்சர்களிடத்திலும், அதிகாரிகளிடத்திலும், அதே போல மக்களுக்கு பணியாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், மேயர்களாக இருந்தாலும், துணை மேயராக இருந்தாலும், கவுன்சிலர்களாக இருந்தாலும், மக்களுக்கு ஆற்றக்கூடிய எந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்களுக்கும் அதைத்தான் தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவேதான் இந்த நிகழ்ச்சியிலும் இதை எடுத்துச் சொல்கிறேன்.

இந்தப் பாலத்தை 10 வருடமாக கஷ்டப்பட்டு கட்டிமுடித்தோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, அப்படிப்பட்ட இப்பாலத்தை இப்போது எப்படி கம்பீரமாக அழகோடு காட்சியளிக்கிறதோ, தொடர்ந்து கடைசிவரையில், மக்கள் அதை நிம்மதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதே அழகோடு, பொலிவோடு இருக்க வேண்டும். அதற்கு இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்து வைத்து, உங்கள் அத்தனை பேருக்கும் இந்தப் பாலத்தை காலம் கடந்து கட்டப்பட்டிருந்தாலும், ஒரு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவதைப்போல, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறது. அதுமாதிரி கொஞ்சம் லேட்டாக இருந்தாலும், லேட்டஸ்ட்-ஆக நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். அதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories