தமிழ்நாடு

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?
cm office
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீட்டில், 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்துப் பார்த்தால், தொழில் துறை நிகழ்ச்சிகள்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

ஒவ்வொரு முறையும் நான் தொழில்துறை அமைச்சர் அவர்களையும், அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?" என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில், மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?
cm office

உங்களது இந்தத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில், 1,891 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த உற்பத்தியில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு பெரு முயற்சிகளை எடுத்து வருகிறது.

கடந்த ஜூலை 2022-இல் 'தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை' என்னால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன.

மேலும் சில நிறுவனங்கள், ஏற்கனவே உள்ள தங்கள் மையங்களை விரிவுபடுத்தியுள்ளன. இதன்மூலம், 1 லட்சத்து 22 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது மிக மிக கவனிக்கத்தக்கது! நீங்கள் இந்த நிறுவனத்தை அமைப்பதன் மூலமாக பல துணை நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு ஏற்படும். இறக்குமதியானது குறையும்.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

இந்தத் திட்டத்தில், 60 விழுக்காட்டுக்கு மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். பெண்களின் நலன் பேணுவதில் அதிக கவனம் செலுத்திவரும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இது வலுசேர்க்கும். பெண்களை அதிக அளவில் பணியமர்த்திடும் நிறுவனங்களை நாங்கள் வரவேற்று கொண்டிருக்கிறோம்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவில், முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்காக நாங்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். அதிலும் குறிப்பாக ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில்தான், இந்த மாத இறுதியில், முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி, நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு நான் அழைப்பு விடுக்க இருக்கிறேன்.

இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று ஒரு உயரிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும், நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பாதையில் ஒரு மைல்கல்லாக, மிட்சுபிஷி நிறுவனத்தின் முதலீடு அமைந்திருப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“ஜப்பான் செல்வது ஏன்?”: முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

இவ்வாறான முதலீடுகள், நாங்கள் அந்த இலக்கை அடைவதற்கு உந்துதல் அளிப்பதோடு, நேர்மறை விளைவுகளை ஏற்படுத்திடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சாம்சங், ஃபாக்ஸ்கான், பெகட்ரான், வோல்டாஸ் போன்ற மின்னணுவியல் துறை சார்ந்த மிகப் பெரும் உற்பத்தியாளர்கள், தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தி அமைப்புகளை நிறுவியுள்ளனர். இவற்றுள் பல நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களையும் நிறுவியுள்ளன.

இவ்வாறான நேர்மறைச் சூழ்நிலையில், மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்தத் திட்டம் இங்கு நிறுவப்படவுள்ளது. தமிழ்நாடு அடைந்திருக்கும் பல வெற்றிகளுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்திடும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பாக, உங்கள் திட்டத்தை நான் வெகுவாக வரவேற்கிறேன். உங்கள் வருங்கால திட்டங்களுக்கும், எங்கள் ஆதரவு நிச்சயமாக தொடரும் என்று இந்த உறுதியை தெரிவித்து இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories