ம.தி.மு.க-வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியைக் கொடியை பொதுச் செயலாளர் வைகோ ஏற்றிவைத்தார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "ம.தி.மு.கவின் 30ஆம் ஆண்டு தொடக்க விழாவைத் தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து ம.தி.மு.க வெற்றிக் கொடியை நாட்டுவோம்.
காவல்துறையில் காலாவதியான மனிதர் தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறலாக உள்ளது. அவர் ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் காலாவதியாகிப் போன ஒரு மனிதர். இந்தியாவில் இதுவரை எந்த ஆளுநரும் இது போன்ற தவறுகளைச் செய்தது கிடையாது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.