திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கணவரிடம் ஈஷா யோக மையத்திற்கு 7 நாள் பயிற்சி செல்வதாகக் கூறிவிட்டு கோவை வந்துள்ளார். இதன்பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து சுபஸ்ரீ கணவர் பழனிகுமார் கடந்த 19ம் தேதி ஆலாந்துரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சுபஸ்ரீ சாலையில் நடந்து செல்வதும், அந்த வழியாக வந்த காரில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் காந்தி காலனியில் உள்ள ஒரு கிணற்றில் சுபஸ்ரீ-யின் உடலை போலிஸார் மீட்டனர். பின்னர் இவரது மர்ம மரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுபஸ்ரீ-யின் மரண விவகாரத்தில் நிச்சயம் உண்மை கண்டறியப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சுபஶ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது (postmortem).
சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் (CCTV) பதிவுகள், சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்". என தெரிவித்துள்ளார்.