பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.
பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன. அரசியல் சாசன அமர்வு முன்பு தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது வாதங்களை முன்வைத்தன.
பொருளாதார இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல, பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதே இடஒதுக்கீட்டின் நோக்கம் என்றும் தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கு விசாரணையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் (12-11-2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, மாண்பமை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தும் முடிவை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து திமுக சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், முன்னேறிய வகுப்பினரை ஏழைகள் என்று அறிவித்ததை ஏற்க முடியாது. முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு 133 கோடி மக்களை பாதிக்கிறது; பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்தவேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.