955 துணை பேராசிரியர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 ஆயிரம் துணைப் பேராசிரியர்கள் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்களின் பணி வரன்முறை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 2012ம் ஆண்டு 955 துணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது. அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என அ.தி.மு.க அரசு அறிவித்தது ஆனால் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 955 துணை பேராசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1030 பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்கவுள்ளார் .
பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 14, 524 மாணவர்கள் அழைக்கப்பட்டு, 10,351 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் புதிய கல்வித்திட்டத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கென்று தனியாக கல்விக் கொள்கை வரையறை செய்ய குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வி திட்டம் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என தெரிவித்துள்ளார்.