தமிழ்நாடு

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்று பணியாற்றி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், இன்று (09-09-2022) மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி. மூர்த்தி அவர்களின் இல்லத் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நம்முடைய அமைச்சர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையினுடைய அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி அவர்களுடைய அருமை மகன் தியானேஷ் அவர்களுக்கும், திரு சிவக்குமார் – பொன்னம்மாள் அவர்களுடைய அன்பு மகள் திருவளர்செல்வி ஸ்மிர்தவர்ஷினி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக் கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நம்முடைய மூர்த்தி அவர்கள் இதனைத் திருமணவிழா என்று விளம்பரப்படுத்தாமல், ஒரு மண்டல மாநாடு, அல்லது ஒரு மாநாடு என்று விளம்பரப்படுத்தியிருந்தால், அது மிக மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். அவர் எதையும் சிறியதாகச் செய்யமாட்டார். பிரம்மாண்டமாகத்தான் செய்வார். அது பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருக்கக்கூடிய முப்பெரும் விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தலைவர் (கலைஞர்) அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு முத்திரையைப் பதிப்பார். “யாரும் செய்யாததை நான் செய்வேன்” என்று ஒரு பிரம்மாண்டத்தை அதிலே பதிப்பார்.

ஏனென்றால் சிறியதாக அவருக்கும் எதையும் நடத்தத் தெரியாது. அதனால்தான் மகனுடைய திருமணத்தைக் கட்சிக்கும் பயன்படவேண்டும், கட்சியினுடைய பிரச்சாரம் நடைபெற வேண்டும், இந்த ஆட்சியினுடைய சாதனைகள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும், கட்சிக்கு ஒரு வளர்ச்சி ஏற்பட வேண்டும், எழுச்சி ஏற்பட வேண்டும், உணர்ச்சி ஏற்பட வேண்டும், உணர்ச்சி ஏற்பட வேண்டும், நமக்கெல்லாம் ஒரு ஆர்வம் ஏற்பட வேண்டும், என்று அந்த நிலையிலே, அவர் மகன் திருமணத்தை, அந்த நோக்கத்தோடு அவர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கல்லில் இரண்டு அல்ல, பல மாங்காய்களை அடிப்பார் நம்முடைய அமைச்சர் மூர்த்தி அவர்கள். அப்படிப்பட்டவர் நம்முடைய மூர்த்தி அவர்கள். நாம் ஆட்சியமைத்த பிறகு, அமைச்சர்களாக யார் யாரைப் போடலாம் என்று நாங்கள் சிந்தித்தோம். கட்சியில் இருக்கக்கூடிய சில முக்கிய நிர்வாகிகளோடு கலந்துபேசினோம். அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியாவது தென்பகுதியில், மதுரைக்கு ஒரு முக்கியத்துவம் தரவேண்டும் என்று முடிவுசெய்து, மூர்த்திக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆனால் எனக்கு ஒரு பயம் வந்தது. ஏனென்றால் அவர் ரொம்ப கோபக்காரர். அப்படிப்பட்டவருக்கு எப்படித் தருவது? என்றொரு அச்சம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். அதனால் அவருக்குத் தரலாம் என்று முடிவுசெய்தோம். அப்படி முடிவுசெய்த நேரத்தில், எந்தத் துறையைத் தரலாம், எந்த இலாகாவை அவரிடத்தில் ஒப்படைக்கலாம் என்று யோசித்தபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையை வழங்கலாம் என்று முடிவுசெய்து அந்த இலாகா அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அச்சத்தோடுதான் தந்தோம். பயம் இருந்துகொண்டே இருந்தது எனக்கு.

ஆனால் அந்தத் துறையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி அவர்களுடைய செயலைப் பார்த்தபோது, பொறுமையின் சிகரமாகவே மாறிவிட்டார் அவர். என்னுடைய எதிர்பார்ப்பைவிட ரொம்ப சிறப்பாக; இன்னும் சொல்லப் போனால், அரசுக்கு வருவாயை ஈட்டக்கூடிய வகையில், ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது நமது அரசு, இந்தச் சூழ்நிலையில், அவருக்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் ஒத்துழைப்போடு, மிகச் சிறப்பாக, அரசுக்குப் பல்வேறு வகையில் வருவாய் வரக்கூடிய வகையில், பல பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

நான் எப்போதுமே பொதுக்கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்லும்போது சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு போவேன். ஏனென்றால் குறிப்புகளில் ஏதும் தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை நான் தயாரித்துக்கொண்டு போவேன். திருமண நிகழ்ச்சிக்கெல்லாம் நான் குறிப்பு எடுத்துக்கொண்டு வரமாட்டேன். ஆனால் இந்தத் திருமண நிகழ்ச்சிக்குக் குறிப்போடு வந்திருக்கிறேன். ஏனென்றால், அவ்வளவு சாதனைகளை அந்தத் துறையின் சார்பில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் செய்துகாட்டியிருக்கிறார்.

* பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை.

* பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) உருவாக்கப்பட்டது.

* திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இவை கடந்த ஆட்சியில் இல்லை, நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், மூர்த்தி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகுதான்.

* அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வந்து செல்ல வசதியாக சாய்தள வசதிகள் (Ramp) அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

* பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து நடைமுறையாக இருந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் உயர்மேடைகள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டிருக்கிறது என்றால் அது நம்முடைய ஆட்சியில்தான். திராவிட மாடல் ஆட்சியில்தான்.

* எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பதிவிற்கு வரும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

* இதைவிட முக்கியமாக, கடந்த காலத்தில் போலியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இரத்து செய்யவேண்டும் என்று, நான் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் அவர்கள் அதிகாரிகளோடு வந்து சொல்லி, அந்த ஆய்வு நடத்தி, அதன் பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி, சட்டமன்றத்திலும் விவாதித்து, உரிய சட்ட திருத்தம் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் உடனடியாகத் தனது ஒப்புதலல் தந்திருக்கிறார். இதுவும் ஒரு சாதனை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. நம் மாநிலத்தில் எப்படி நிறைவேற்றினோம் என்று கேட்டு எல்லா மாநிலத்தின் முதலமைச்சர்களும், எல்லா மாநிலத்தின் அமைச்சர்களும், இன்றைக்கு நம்மை அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

* சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள், பொதுமக்கள் எளிதில் அணுகும் விதமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.

- இப்படி அமைச்சர் மூர்த்தி அவர்களின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா என்று கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை, கீர்த்தி பெரியதாய் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மூர்த்தி பெரியவர்தான்.

இப்படித்தான், நம்முடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக் கூடிய ஒவ்வொரு அமைச்சர்கள் அத்தனை பேருமே, போட்டி போட்டிக்கொண்டு, அவர்களின் துறையின் சார்பில் இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய காட்சியை நான் மட்டுமல்ல, இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் எந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்தார்களோ… நாம் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி தந்தோம். தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுச் சொன்னோம். நேரடியாகப் போய் அவர்களிடத்தில் விளக்கிச் சொன்னோம். அதை ஏற்றுக்கொண்ட மக்கள், நம்மீது நம்பிக்கை வைத்து, நமக்கு வாக்களித்தார்கள். இன்றைக்கு வாக்களித்து நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய மக்கள், ஒரு நம்பிக்கையோடு, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது, பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம்.

ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு நமக்கு எண்ணிக்கை வந்துவிட்டது. அதற்குப் பிறகு நான் கோபாலபுரத்தில் இருந்து, லயோலா கல்லூரிக்குச் சென்று, நான் வெற்றி பெற்ற சான்றிதழ் – கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறுவதற்காகச் சென்றேன். அதைப் பெற்றுக்கொண்டு நேராக, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடய நினைவு மண்டபத்துக்கு, அவர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடிய நினைவாலயத்துக்கு நான் சென்றேன். மாலை வைத்து மரியாதை பண்ணோம். வெற்றிச் செய்தியை அவரிடத்தில் ஒப்படைத்தோம். அதற்குப் பிறகு நான் வெளியில் வருகிறபோது, பத்திரிகையாளர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு ஒரு சில கேள்விகளைக் கேட்டபோது நான் சொன்னேன்.

“வெற்றி பெற்றதற்கு எல்லோரும் இன்று வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புவது, திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெற வைத்தவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். எங்கள் கூட்டணிக் கட்சிக்கு வெற்றி தேடித்தந்த வாக்காளப் பெருமக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால் இந்த ஆட்சிக்கு எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து, நாங்கள் பணியாற்றுவோம், வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடையணும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்குப் போடாமல் போய்விட்டோமே என்று வருத்தப்படக் கூடிய அளவுக்கு எங்கள் பணி இருக்கும் என்று நான் சொன்னேன்.

எந்த உறுதிமொழி தந்து ஆட்சிக்கு வந்தோமோ, அந்த உறுதிமொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட இப்போது நம்பிக்கையாக இருக்கிறார்கள். பல மடங்கு நம்பிக்கை நம் மீது ஏற்பட்டிருக்கிறது. அசைக்க முடியாத நம்பிக்கை நம்மீது ஏற்பட்டிருக்கிறது. நாம்தான்! இனி எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம் என்ற நம்பிக்கை நம்மைவிட மக்களுக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், அதுவும் ஒரு சாட்சியாக அமைந்தது.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

நான் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுபேற்றதற்குப் பிறகு, திறப்புவிழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா, கட்சி நிகழ்ச்சி, இப்படிப் பல நிகழ்ச்சிகளுக்கு நான் சுற்றுப்பயணம் செய்கிறபோது, காலையில் அரசு நிகழ்ச்சி, மாலையில் இன்னொரு மாவட்டத்தில் ஒரு அரசு நிகழ்ச்சி என, இரண்டு நிகழ்ச்சிதான். ஆனால், அந்த 24 மணி நேரமும் நிகழ்ச்சிதான். அது ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சி. தானாக வந்த நிகழ்ச்சி. எப்படி என்று கேட்டீர்களானால், ஓரிடத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போகிறோம் என்றால், ஒரு 15, 20, 30 நிமிடங்களில் போய்விடலாம். ஆனால் இப்போது நான் 15 நிமிடத்தில் போக வேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிறது. என்ன காரணம்! போகிற இடமெல்லாம் மக்கள், சாலையின் இருமருங்கிலும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மாணவர்கள் என்று நின்றுகொண்டு, வரவேற்கிற அந்தக் காட்சி. வரவேற்பது மட்டுமல்ல, வாழ்த்து சொல்கிற காட்சி மட்டுமல்ல, கோரிக்கை அடங்கிய மனுக்களையும் தருகிறார்கள். நம்பிக்கையோடு தருகிறார்கள். இவர்களிடத்தில் மனுவைக் கொடுத்தால், நிச்சயம் இதை நிறைவேற்றுவார்கள், என்ற நம்பிக்கை இன்று மக்களிடத்தில் வந்திருக்கிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று ஒரு துறை தொடங்கப்பட்டு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் அதைக் கண்காணிக்கக் கூடிய வகையில், அதிகாரிகள் அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கிறது. சாலையில் போகும்போது, இருபுறமும் நின்று வரவேற்பதோடு மனுக்களையும் கொடுப்பார்கள். மனுவைப் பார்த்தால் அப்படியே காரை நிறுத்தச் சொல்வேன். ஒருவர் மனு வைத்திருந்தாலும் சரி. நிறுத்தி அதை வாங்கிக்கொண்டுதான் போவேன். அதுவும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், அவர்களிடத்தில் நானே சென்று, வேனை விட்டு இறங்கி நானே நடந்து போய் அதை வாங்கிக்கொண்டு வருவேன். சாதாரண பேப்பரை வைத்திருப்பார்கள். ஏதோ பில் வைத்திருப்பார்கள். அதை மனு என்று நினைத்து நான் போய் வாங்கிவிட்டேன். இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறது. எப்போதுமே மனுவைக் கொடுக்கிறபோது, ஒரு குறையைச் சொல்லிக் கொடுப்பார்கள். பல வருடமாகக் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். நடக்கமாட்டேன் என்கிறது. இதையாவது நீங்கள் பாருங்கள், அப்படி இப்படி என்று சொல்லிக் கொடுப்பார்கள். அது கடந்த ஆட்சியில். இப்போது ஒரு நம்பிக்கையோடு, கொடுக்கும்போதே நன்றி என்கிறார்கள். ஏதோ முடித்துவைத்தது போல நன்றி என்கிறார்கள். இன்னும் மறக்க முடியாத ஒரு செய்தி என்னவென்றால், சில பேர் இப்போது, சமீபகாலமாக, “உங்க உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்க உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுகிறபோது, மக்கள் என் மீது, இந்த அரசின் மீது, எந்த அளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்று கண்கூடாகப் பார்க்கிறேன். அந்த அளவுக்கு இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல்வேறு சாதனைகளைத் தமிழக மக்களுக்காக இந்த அரசு செய்துகாட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த மதுரையைச் சுற்றிலும் மட்டும் சொல்லவேண்டும் என்றால்,

* முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் மாபெரும் நூலகம் அமையப் போகிறது. 70 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது.

* தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் அமையப்போகிறது என்று நான் சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில், அந்தப் பணியும் தொடங்கி நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

* மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கம் அமையப் போகிறது.

* சென்னையைப் போலவே மதுரைக்கும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

* மதுரையைச் சுற்றிலும் சுற்று வட்டச் சாலை அமைக்கப்படுகிறது.

* மீனாட்சி அம்மன் கோவில் அருகில் பல அடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்பட்டு திறந்து வைத்தேன்.

*அதேபோல, தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையம். அதையும் நேற்று நான் திறந்துவைத்தேன்.

* விடுபட்ட இடங்களில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- இப்படி, மதுரையில் மட்டுமே பல்வேறு பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான பணிகள் நம்முடைய அரசின் சார்பில் நடைபெற்று வருகிறது. என்றைக்கு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டோமோ அன்று முதல், தொடர்ந்து இடைவிடாமல், நான் மட்டுமல்ல, அமைச்சர் பெருமக்களும், எங்களுக்குத் துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பில் இருக்கக் கூடிய பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேருமே இன்று உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு நம்பர்-1 நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணியாற்றி வருகிறோம்: முதலமைச்சர் பேச்சு!

நேற்றைய தினம் நெல்லையில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்படி வேனில் போகும்போது, சில போஸ்டர்கள், சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். அதில் ஒரு சுவரொட்டி என்னை ரொம்பவும் கவர்ந்தது. அது என்னவென்றால், A.M... P.M... பார்க்காத C.M. அதாவது காலை மாலை பார்க்காத C.M என்று ஒட்டியிருந்தார்கள். அது ஒரு பக்கம். ஆனால் அப்போது நான் நினைத்தது என்னவென்றால், AM, PM என்பதைவிட, நான் MM – CM ஆக இருக்க விரும்புகிறேன். அப்படி என்றால், Minute to Minute. அதான் MM. ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்ற நிலையில் MM– CM ஆக இருந்து, "T.N நம்பர்-1" என்று உருவாக வேண்டும் என்ற நிலையில், எங்கள் பணி நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த சந்தடிச் சாக்கில் ஒரு காமெடி. நீங்கள் எல்லாம் சமூக ஊடகங்களில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். “தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” யார்? எடப்பாடி பழனிசாமி!

அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.வே அவரிடம் பேசுவதில்லை.

உங்கள் எம்.எல்.ஏ.வே உங்களிடம் பேசுவதில்லை.

எங்கள் எம்.எல்.ஏ வந்து பேசுகிறார்கள் என்று புரூடா விட்டுக்கொண்டிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி. இன்றைக்கு அந்தக் கட்சி, அ.தி.மு.க கட்சி பிளவுபட்டிருக்கிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் என்று இரண்டு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.

இப்ப அவர் இருக்கும் பதவியே டெம்ப்ரவரி பதவி. இந்த ‘டெம்ப்ரவரி’ பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க இவருக்குத் தகுதி இருக்கிறதா?

நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக் கொள்வதற்காகதான் இந்தக் காமெடிக் கதையை எல்லாம் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறேன். நல்லது செய்யவே இப்போது நேரமில்லை. இப்படி, கெட்டதை, பொய்யை, திட்டமிட்டு செய்யக்கூடிய பொய்ப்பிரச்சாரத்தைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதைப் பற்றி, கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் நமக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த நன்மையை மட்டும் செய்வோம். மக்களுக்காக வாழ்வோம். அப்படிப்பட்ட பணியைச் செய்துகொண்டிருக்கக் கூடிய அமைச்சரவையிலேதான் மூர்த்தி அவர்களும் அமைச்சராக இருந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அவருடைய வீட்டுச் செல்வங்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories