கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்து வடவள்ளியை சேர்ந்தவர் ஆதர்ஸ் (வயது 18). தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கும் இவர், நேற்று தனது நண்பர்களான ரோஷன் (வயது 19), ரவி (வயது 18), நந்தனன் (வயது 18) ஆகியோருடன் சிறுவாணி சாலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
கொண்டாட்டம் முடிந்து இவர்கள் 4 பெரும் இன்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பினர். அப்போது அந்த கார் தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த விவசாய கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் கார் ஓட்டி வந்த ரோஷன் மட்டும் உயிர் பிழைத்த தப்பித்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த ஊர் மக்கள், காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி கிணற்றுக்குள் மூழ்கி கிடந்த கார் வெளியே கொண்டு வரப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உயிரிழந்திருந்தனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.