தமிழ்நாடு

கொஞ்சம் விட்டிருந்தால் தமிழ்நாடு சென்னை பிரதேசம் ஆக மாறியிருக்கும்: சண்டை செய்வதன் அவசியத்தை விளக்கிய CM!

பேரறிஞர் அண்ணா தலைமையில், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் விட்டிருந்தால் தமிழ்நாடு சென்னை பிரதேசம் ஆக மாறியிருக்கும்: சண்டை செய்வதன் அவசியத்தை விளக்கிய CM!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.7.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை பின்வருமாறு :-

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

"தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே…!

அத்தகைய தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் போல இதுவும், ‘சென்னைப் பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

திராவிடம் என்ன கிழித்தது என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும்.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா?

மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா?

இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

அதனால்தான், தமிழ்நாடு நாளைத் தமிழ்நாடு திருநாளாக நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழினம்தான்.

நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல, உலகளாவிய இனம். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு!

இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு!

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன் தோன்றிய மூத்த குடி - நம்முடைய தமிழ்க்குடி!"

அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி இந்தத் தமிழ்நாடுதான்!

தமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இவை அனைத்தும் உலகப்புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்.

“உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்!

அவமானம் துடைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதன் மூலமாக, தாழ்ந்து கிடந்த தமிழினத்தை, தலைநிமிர வைத்த நாள்தான் இந்த ஜூலை 18-ஆம் நாள்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories