திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலிஸார் நடத்திய விசாரணையில் 9ம் வகுப்பு மாணவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் மகேந்திரன் அழைத்துச்சென்றது தெரியவந்தது. மகேந்திரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் தங்கியிருந்த மகேந்திரனை கண்டோன்மெண்ட் மகளிர் போலிஸ் கைது செய்து நடத்திய விசாரணையில் பள்ளி மாணவியை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது .
இதனையடுத்து மகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியும், மகேந்திரனும் உறவினர்கள் எனவும் மாணவிக்கு மகேந்திரன் சகோதரன் முறை வேண்டும் என போலிஸார் கூறி அதிர்ச்சி அளித்தனர்.