தமிழ்நாடு

முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘வேளாண் சிறப்பு திட்டம்’ : விவசாயிகள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் !

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘வேளாண் சிறப்பு திட்டம்’ : விவசாயிகள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.5.2022) தலைமைச் செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம். இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு!

2021-22-ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூபாய் 227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை இன்றைக்கு நான் துவக்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

* கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டுவருதல்.

* நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல்.

* வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல்.

* ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

* கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல்.

* வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு / குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல்.

* கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல்.

* பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல்,

உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

* உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வேளாண்மை – உழவர் நலத் துறையின் பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

* மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும்.

கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டிய இந்தக் காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories