இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் தெப்பக்குளத்தையும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
அப்போது, “தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிற நிலையில் சட்டமன்றத்தில், வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோவிலின் தெப்பக்குளத்தில் மதில் சுவர் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அங்கு மதில் சுவர் எழுப்பப்படுவது தொடர்பாக கோவிலை ஆய்வு செய்தேன்.
சட்டப்பேரவையில், தமிழில் அர்ச்சனை செய்தால் இதற்கு முன்னதாக இருந்த பங்கு தொகையை விட 60 சதவீதம் கூடுதலாக தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது. அனைத்து மதத்திற்கும் சமமான ஆட்சிதான் நமது முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி. அதன் அடிப்படையில்தான் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதலமைச்சர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்பது முக்கியமானது அதனை தமிழக முதலமைச்சர் வரவேற்கிறார். மகளிருக்கான உரிமைத் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சொல்வதை செய்தும் சொல்லாததையும் செய்வதுதான் தற்போது நடைபெற்று வருகிற ஆட்சி. அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த அனைத்து அறிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.