
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைதோறும் பல்லாவரத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக ஒரு வருடத்திற்கு மேலாக இந்தச் சந்தை கூடாமல் இருந்தது. தற்போது கொரோனா விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டதை அடுத்து பல்லாவரம் சந்தை வழக்கம்போல் வெள்ளிக்கிழமைகளில் கூடி வருகிறது.
இந்த சந்தையில் காய்கறி முதல் கணினி வரை அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதால் சென்னை மட்டுமல்லாது அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் இச்சந்தைக்கு பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இங்கு வந்து செல்வார்கள்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பல்லாவரம் சந்தைக்கு பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வந்துள்ளார். அப்போது அவரது செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து புஷ்பவனம் குப்புசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட அவரது செல்போன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் உட்பட இன்று ஒரே நாளில் 7 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.








