தென்காசி மாநிலம், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து முத்துமாரிக்கு, சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தை பிறந்த 5வது நாளில் குழந்தையை அதே பகுதியில் இருந்த குளத்தில் வீசியெறிந்து கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சேர்ந்தமலை பகுதியில் இருந்த முத்துமாரி மற்றும் சசிகுமாரை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை செய்தபோது குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்தது மட்டுமல்லாமல் மேலும் ஒரு குழந்தையை கொலை செய்ததும் தெரியவந்தது.
2018ஆம் ஆண்டு, முத்துமாரிக்கும், சசிகுமாருக்கும் குழந்தையை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தையை இருவரும் கொலை செய்து வீட்டின் அருகிலேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தபோது, குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
அதை பரிசோதனைக்காக போலிஸார் அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தகாத உறவால் பிறந்த 2 குழந்தைகளை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.