தமிழ்நாடு

”7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி” - சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி ஐகோர்ட் அதிரடி!

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

”7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி” - சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி ஐகோர்ட் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு தகுதி அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.

தமிழக உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது என்று வாதிட்டார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள அரசு தவறி விட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குகின்றன என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டு வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு "தமிழக அரசின் உத்தரவு செல்லும். இந்த உத்தரவு 5 ஆண்டுகளுக்கு பின்னர் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories