தமிழ்நாடு

”முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறவுமே துபாய் சென்றேன்” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

துபாய் நாட்டிற்குச் சென்ற அரசு முறைப் பயணம், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும்தான் என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

”முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெறவுமே துபாய் சென்றேன்” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. அப்போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக துபாய்க்கு சென்று முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக விவரித்திருந்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி” எங்கள் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில் இன்றைக்கு- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழில் வளர்ச்சிக்கு இவ்வளவு முயற்சிகளை எடுத்துள்ள இந்த அரசின் சார்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். துபாயில் நடைபெற்ற உலக கண்காட்சி, 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிகழ்வுகளில் ஒன்று. 192 நாடுகள் பங்கேற்ற அக்கண்காட்சியில் மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை “தமிழ்நாடு வாரமாக” கடைபிடிக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி வாரங்களில்தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் நான் துபாய் சென்று, மார்ச் 25 ஆம் தேதி “தமிழ்நாடு அரங்கினை”, அந்த அரங்கில் உள்ள கண்காட்சியைத் திறந்து வைத்தேன்.

துபாயிலும், அபுதாபியில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்களைச் சந்தித்து, சொந்த மண்ணான தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத் துறை அமைச்சர், வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர், வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆகியோரையும் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினேன்.

முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ABQ போன்ற நிறுவனங்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்களை நிருவகித்திடும் நிறுவனங்கள், இவர்களையும் சந்தித்து வளர்ந்து வரும் துறைகளான எரிசக்தி, சரக்குப் போக்குவரத்துத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், தரவு மையங்கள், மின்னணுவியல் போன்ற திட்டங்களில் பெருமளவில் முதலீடுகளைப் பெற்றிட உரையாடினேன். இதைத் தொடர்ந்து, இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற ஒரு பணிக்குழு (Working Group) விரைவில் அமைக்கப்படவுள்ளது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், இந்த துபாய் பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய எஃகுக் குழாய் உற்பத்தியாளர்களில் ஒன்று, சென்னையைச் சுற்றியுள்ள மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் அடங்கியிருக்கக்கூடிய பகுதியில் 1,000 கோடி ரூபாய் முதலீடும், 2,000 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு உற்பத்தித் திட்டத்தினை நிறுவ தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

லூலூ பன்னாட்டுக் குழுமம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு/வட ஆப்பிரிக்கா மண்டலங்களில் பல்வேறு திட்டங்களை நிறுவியுள்ளது. “இரு பெரும் வணிக வளாகங்கள்”, “உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம்” ஆகியவற்றை தமிழ்நாட்டில் நிறுவ, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இந்தக் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆஸ்டர் DM மருத்துவக் குழுமத்துடன் சென்னையில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கும் வகையில், 500 கோடி ரூபாய் முதலீடும், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஷெராப் குழும நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு “சரக்குப் பூங்கா” அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் “ஆடை மற்றும் தையல் திட்டங்களை” அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமத்துடன் 100 கோடி ரூபாய் மதிப்பில், 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நான் துபாய் நாட்டிற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் விளைவாக கிடைக்கப் போகும் முதலீடுகள். ஆகவே துபாய் நாட்டிற்குச் சென்ற அரசு முறைப் பயணம், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும்தான். அந்த இலக்கை எட்டும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறேன் என்பதை பெருமையுடன் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories