தமிழ்நாடு

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“இந்த இந்திய நாடே சமத்துவ நாடாகவும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். இதற்குத் தமிழ்நாடும் நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

"இந்த நிகழ்ச்சி உள்ளாட்சித் துறையின் சார்பில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட துறையின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியிலே, என்ன தான் இன்றைக்கு நான் முதலமைச்சராக இருந்தாலும், ஏற்கனவே நான் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன் தான் நான். அப்போது எல்லோரும் சொல்வார்கள், உள்ளாட்சித் துறையிலே நல்லாட்சி நடத்துகின்ற நாயகன் என்று சொல்வார்கள். இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், தலைவர் கலைஞர் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் அப்பொழுது கலந்து கொண்டபோது, எனக்கு உள்ளாட்சித் துறையைப் பார்த்தால், ஸ்டாலினை பார்த்தால் எனக்கு ஒரு பொறாமை வந்திருக்கிறது. எனவே, அந்தத் துறையை நானே வைத்திருந்தால் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்குமே, இன்னும் அதிகமான பெயர் கிடைத்திருக்குமே என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்.

ஆகவே அப்படிப்பட்ட, மக்களோடு மக்களாக, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு துறை இந்த உள்ளாட்சித்துறை. அந்தத்துறையின் அமைச்சராக நான் ஏற்கனவே இருந்தவன் என்ற அந்தப் பெருமையோடு, அந்தப் பூரிப்போடு, புளங்காயித உணர்வோடு. இன்னும் சொல்லவேண்டுமென்றால், கொஞ்சம் திமிரோடு, கொஞ்சம் ஆதங்கத்தோடு, அதிலே நான் பங்கேற்பதிலே உள்ளபடி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, இந்தத் துறை மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய துறையாக அமைந்திருக்கிறது. ஆகவே இதில் சிறப்பாக பணியாற்றவேண்டும், இந்தத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை உடனடியாக நிறைவேற்றித் தரக் கூடிய துறையாக இது அமைந்திடவேண்டும் என்று அந்தத் துறையினுடைய அமைச்சராக இருந்த போது நான் எண்ணியதுண்டு. இப்பொழுது முதலமைச்சராக ஆனதற்குப் பிறகும் நான் எண்ணிக் கொண்டிருப்பது உண்மை.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதனால்தான் இந்தத் துறையிலே யாரை அமைச்சராக நியமிக்கலாம் என்று யோசித்தபோது, நம்முடைய பெரியகருப்பன் அவர்கள் என்னுடைய எண்ணத்திலே தோன்றினார். அதனால் அவரை இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று பணியாற்ற வேண்டுமென்று சொல்லி அந்தத்துறையை இன்றைக்கு அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு, இந்தத்துறையில் செயலாளராக இருக்கக்கூடிய திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ்., அவர்கள் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது, நான் முதலமைச்சராக பொறுப்பேற்போது, அவர் தலைநகர் டெல்லியிலே, அதுவும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் டெல்லிக்குச் சென்றபோது அவரை சந்தித்துப் பேசினேன். நீங்கள் ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்திருக்கிறீர்கள். பல்வேறு அரசுத் துறையிலே பொறுப்பிலிருந்து பணியாற்றி இருக்கிறீர்கள். உங்கள் பணிகளை பார்த்து நான் வியந்ததுண்டு. ஆகவே, ஏன் நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள், தமிழ்நாட்டில் வந்துவிடலாமே, ஒரு முக்கியமான துறையை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது, நீங்கள் சொன்னால் அடுத்த வினாடியே வந்துவிடுகிறேன் என்று என்னிடத்திலே உறுதி தந்தார். அதனால்தான் நான் உடனடியாக டெல்லியில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, பிரதமர் அலுவலகத்தோடு எங்கள் அதிகாரிகள் மூலமாக தொடர்பு கொண்டு, இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு அவரை வரவழைத்து உள்ளாட்சித் துறையினுடைய, ஊரக வளர்ச்சித் துறையினுடைய செயலாளராக இன்றைக்கு அந்தப் பொறுப்பேற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் அவர் பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவர்களுக்கு அமைச்சராக இருக்கும் பெரியகருப்பன் அவர்களுக்கு அந்தத் துறையில் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார் பெயரிலே அமைந்திருக்கக்கூடிய சமத்துவபுரத்தினுடைய திறப்புவிழா, அரசுக் கட்டடங்களுடைய திறப்புவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - இந்த மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த விழாவிலே நான் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்பு உங்களிடத்திலே ஒரு கேள்விக் கேட்கப்போகிறேன். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்கிறேன். நானே நேரடியாக உங்களுக்கருகிலே வந்து, உங்களிடத்திலே நீங்கள் காட்டிய அந்தப் பாச உணர்வுக்கு நன்றியைத் தெரிவிக்கக்கூடிய வகையில் எல்லோரிடத்திலும் இல்லை, குறிப்பிட்ட ஒரு சிலரிடத்தில் மட்டும் கை குலுக்கி உங்கள் வாழ்த்துகளை நான் பெற்றேன். அப்போது சில தாய்மார்களிடத்திலே, சகோதரிகளிடத்திலே நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த 10 மாத கால திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று தாய்மார்கள் சொன்னார்கள். ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். எந்தக் குறையும் இல்லை, இந்த 10 மாத காலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நிம்மதியாக இருக்கிறோம்.

ஆகவே இன்றோடு அல்ல, இது தொடரும், தொடரவேண்டும். அப்படி தொடர வேண்டுமென்பதற்காக உறுதி எடுத்துக்கொள்ளக் கூடிய, அதை தொடர்ந்து நிறைவேற்றக்கூடிய அந்த நிலையிலே தான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆக இப்படிப்பட்ட இந்த சிறப்பான நிகழ்ச்சியை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்களுக்கும், துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும், அதேபோல, மாவட்டத்தினுடைய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய மோகன், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் அத்தனை பேருக்கும், அந்த நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தை மீண்டும் ஒருமுறை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

"பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” - என்று எடுத்துச் சொன்ன தந்தை பெரியாரின் 95 ஆண்டுகால வாழ்க்கையை இரண்டே வரிகளில் வடித்துத் தந்தார், யார்? நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சாதியால் - மதத்தால் - பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் – பாலினப் பாகுபாட்டால் - மூடப்பழக்க வழக்கங்களால் - ஆண்டான் அடிமை என்ற உணர்வால் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மனிதர்களை ஒன்று திரட்டி - நீ மனிதன், அதுவும் சாதாரண மனிதன் அல்ல – சுயமரியாதை இருக்கக்கூடிய மனிதன் - நீ தமிழன் – என்ற உணர்வை ஊட்டி எழுச்சி பெற வைத்தவர்தான் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள். சுயமரியாதை உணர்வும் - சமதர்மக் கொள்கைகளையும் - பகுத்தறிவுச் சிந்தனையும் - சமூகநீதி வழிமுறையும் கொண்டதாக, இந்த நாட்டை மாற்றுவதற்காக மகத்தான பணிகளைச் செய்தவர் தான் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள். அவர் இல்லையென்றால் அறிஞர் அண்ணா இல்லை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இல்லை, ஏன், நாம் இல்லை, இந்த இயக்கமும் இல்லை. தமிழ்நாடு இன்று அடைந்துள்ள முன்னேற்றம் இல்லை! தந்தை பெரியாரும் - இந்த திராவிட இயக்கமும் தோன்றாமல் போயிருந்தால், இந்தத் தமிழ்ச்சமூகம் இன்று இத்தகைய நிலைக்கு வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்த இயக்கத்தின் நூறு ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகளை நாம் உணர முடியும்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பழமைவாத கருத்துகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் இன்றைக்கும் பின்பற்ற பரப்புரை செய்து கொண்டிருக்கக்கூடிய சிலரது ஆதிக்கத்தால், நாட்டில் என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் எழுகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! புரியும்!

அந்த சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் எடுபடாமல் போனதற்குக் காரணம் யார் என்று கேட்டால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். திராவிட இயக்கத்தினுடைய தலைவர்கள்தான்! சாதி என்ற அழுக்கைச் சுமந்து வாழ்ந்து வந்த இந்தச் சமூகத்திற்குப் பகுத்தறிவை ஊட்டி - பண்படுத்தி, தன்மான உணர்ச்சி மிக்க - சமத்துவமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பியது நம்முடைய திராவிட இயக்கம் தான்! இதற்கெல்லாம் வித்திட்ட தந்தை பெரியார் அவர்களது பெயரால், நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கனவுத் திட்டம்தான் இந்தச் சமத்துவபுரம் என்பதை மறந்துவிடக் கூடாது.

எந்தவிதப் பாகுபாடின்றி, எந்தவித வேறுபாடின்றி இந்தச் சமூகம் வாழவேண்டும் என்பதற்காகத்தான் குடியிருப்புகளாக நம்முடைய ஊர்கள் மாற வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார். ஒரு குறிப்பிட்ட சாதியினர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலை இல்லாமல், அனைவரும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், ஒற்றுமையோடு, ஒருமித்தக் கருத்தோடு அவர்கள் வாழவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளம்தான் சமத்துவபுரங்களை தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். 1997-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டத்தை கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

அனைத்துவிதமான முற்போக்கிற்குரிய புரட்சிகளுக்கும் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தகைய சமத்துவபுரங்கள் உருவாகியிருக்கிறது. இதுதான் சமத்துவத்தைப் பேசிக் கொண்டிருக்கக்கூடிய ‘திராவிட மாடல்!’. இதுதான் திராவிட மாடல். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ, ஒரு இடத்தில் சும்மா ஒரு அடையாளத்திற்காக நாம் கட்டவில்லை. தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்களை முதலைமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் அமைத்துக் கொடுத்தார். அதிலே ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் - வானூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரம்!

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆகவே, இதை தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நிதியை ஒதுக்கி அந்தப் பணி தொடங்கியது. அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாதியிலேயே அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சமத்துவபுரத்தை அவருடைய மகன் ஸ்டாலின் இன்றைக்கு வந்து உங்களிடத்திலே திறந்து வைத்திருக்கிறேன். அதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி. கலைஞருடைய கொள்கையை, அவரது சிந்தனைகளை, அவரது நினைவுகளை, அவரது கனவுகளை என்னுடைய மூச்சென முன்னெடுத்துச் செல்லக்கூடிய நிலையிலே நான் இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகத்தான், இந்த சமத்துவபுரத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். 2010-2011 ஆம் ஆண்டிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம் இது. பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்துக்கு இருண்டகாலமாக இருந்ததுடைய அடையாளம்தான், அதற்கொரு சாட்சியாக இந்த சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது!

இப்போது நம்முடைய ஆட்சி. நாம் எப்போதும் இந்த ஆட்சியை தலைவர் ஆட்சி, என்னுடைய ஆட்சி என்று சொல்வது கிடையாது, நம் ஆட்சி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, நம்முடைய ஆட்சி அமைந்தவுடன்,

➢ இந்தச் சமத்துவபுரத்தில் 21 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதி,

➢ 7 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள்,

➢ தெருவிளக்குகள், மழைநீர் வடிகால்களுடன் கூடிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு, விரைவில் 10 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயில் அங்கன்வாடி கட்டடமும், 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகக் கட்டடமும் அமைக்கப்பட இருக்கிறது.

ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள், அந்த 100 வீடுகளில் 40 வீடுகள் ஆதிதிராவிட வகுப்பினருக்கும், 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும், 25 வீடுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 10 வீடுகள் இதர வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்து அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய ஒரு சூழல் இந்த சமத்துவபுர திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமத்துவபுரங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் இதுவரை- 90 விழுக்காடு குடும்பங்கள் தொடர்ந்து அதே வீடுகளில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமகிழ்ச்சியான செய்தி என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அரசால் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் அனைத்துப் பிரிவு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சான்றாக, சாட்சியாக அமைந்திருக்கிறது.

இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால்தான், அனைத்து சமத்துவபுரங்களும் எங்கேயாவது பழுது இருந்தால் அது மக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்கு போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் அது உடனடியாக சீரமைக்கப்படும் என்று 24-06-2021 அன்று சட்டமன்றத்தில் நான் தெரிவித்தேன்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சமத்துவபுரங்களைச் சீரமைக்கிறோம் என்று சொன்னால், ஏதோ கட்டடங்களைச் சீரமைப்பது மட்டுமல்ல; பிற்போக்குத்தனங்களில் இருந்தும் அடிமைத்தனத்தில் இருந்தும் மீண்ட இந்தத் தமிழினம் சற்றே தேங்கிவிட்ட நிலையையும் சீரமைக்கிறோம்.

அந்த அடிப்படையில் தான் 1997 முதல் 2010 வரை கட்டப்பட்ட சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாயில் சீரமைக்க இந்த அரசு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமத்துவபுரங்கள் புதுப்பொலிவைப் பெறும்.

சமத்துவபுரத்தைப் போல 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கைவிடப்பட்ட மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது என்று சொன்னால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். அதுவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தான் தொடங்கி வைக்கப்பட்டது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்றால் அதில் முக்கியமான திட்டமாக, ஒரு தனி சிறப்புத் திட்டமாக இந்தத் திட்டம் இருந்தது.

ஊராட்சி அளவில் திட்டமிடுதலை ஊக்குவித்து-அனைத்துத் துறை திட்டங்களையும் ஒருங்கிணைத்து-அனைத்து கிராமங்களுக்கும்- அனைத்து துறைகளின் திட்டங்களும் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு நூலகம் அமைத்தோம். அறிவுசார்ந்த இளைய சமுதாயம் உருவாக வழிவகை செய்தோம். ஆனால், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்று ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய நூலகமாக கலைஞர் அவர்கள் அன்றைக்கு உருவாக்கித் தந்தார்கள். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அதையும் சீரழிப்பதற்கான முயற்சியில் கடந்த கால ஆட்சி ஈடுபட்டது. அதையும் இப்போது சீர்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது மூலமாக தமிழகக் கிராமங்கள் மிகச் சிறந்த வளர்ச்சியை நிச்சயமாக அடையும்.

இதேபோல் 1997-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு திட்டம் தான் ‘நமக்கு நாமே’ திட்டம். இந்தத் திட்டத்தையும் கடந்த பத்து வருடமாக முடக்கிப் போட்டு வைத்திருந்தார்கள்.

பொது சொத்துகளை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பை பரவலாக்கவும், தற்சார்பு எண்ணத்தை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம்தான் ‘நமக்கு நாமே’ திட்டம். அந்தத் திட்டமும் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பிலான நிகழ்ச்சி என்பதால், இந்தத்துறையின் மூலமாக கடந்த பத்து மாதகாலத்தில் நிறைவேற்றியுள்ள திட்டங்களையும், சாதனைகளையும் மட்டும் உங்களுக்கு நான் சுருக்கமாக, தலைப்புச் செய்திகளாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கடந்த ஓராண்டில் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு 6,970 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டது மட்டும் 4,500 கோடி ரூபாய் ஆகும்.

* மொத்தம் 14 இலட்சத்து 32 ஆயிரத்து 204 ஊரக வீடுகளுக்கு 1,162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டிருக்கிறது.

* 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் 5,696 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் 54 பாலங்கள் அமைக்க 2,223 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

* இந்த அரசு, நம் அரசு பொறுப்பேற்ற பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டுகளில் நிலுவையில் இருந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 759 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.

* ஊரகப் பகுதிகளில் 2 இலட்சத்து 89 ஆயிரத்து 887 வீடுகளை 8,017 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டடிருக்கிறது. 1 இலட்சத்து 4 ஆயிரத்து 345 வீடுகளின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது.

* 4 இலட்சத்து 8 ஆயிரத்து 740 சுய உதவிக் குழுக்களுக்கு, 21 ஆயிரத்து 392 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, மிகப் பெரிய சாதனையை நம்முடைய அரசு இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் கடந்த ஓராண்டில் (2021-22), 23,841 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 இலட்சத்து 21 ஆயிரத்து 37 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

- இவை எல்லாம் ஒரே ஒரு துறையின்கீழ், கடந்த ஓராண்டுக்குள் செய்து தரப்பட்டவை மட்டுமே. இப்படி ஒவ்வொரு துறையாகச் சொல்ல ஆரம்பித்தால் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்திற்கு நான் சென்று சேர முடியாது. அதனால்தான் தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறேன்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பத்தாண்டுகாலம் செய்து தர வேண்டிய திட்டங்களை, பத்து வருடமாக செய்யாத திட்டங்களை, பத்தே மாதத்தில் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சி தான் நம் ஆட்சி. இதை நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நாள், பல்வேறு துறைகள் சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைப் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

22 கோடி ரூபாய் மதிப்பிலான 33 கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

42 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

* பழங்குடியினர் - நரிக்குறவர் நலவாரிய அட்டைகள்

* பழங்குடியினருக்கு வீடுகள்

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள்

* பண்ணைக் கருவிகள்

* வேளாண் இடுபொருள்கள்

* இலவசத் தையல் இயந்திரம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் - ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.

”இந்தியா என்பது மும்பையோ – கொல்கத்தாவோ அல்ல; ஆயிரம் ஆயிரம் கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது!” என்றார் தேசத் தந்தை மகாத்மா காந்தி!

எனவே கிராமங்கள் வளர வேண்டும்! வளம் பெற வேண்டும்!

கிராமங்கள் வளர்ந்தால்தான் மாநிலங்கள் வளரும்!

மாநிலங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் வளர்ச்சி உண்மையானதாக இருக்க முடியும்!

ஆகவே வலுவான கிராமங்களுக்கு அடித்தளமிடும் வலுவான மாநிலங்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு – முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்!

“மக்களிடம் செல், மக்களோடு மக்களாகச் சேர்ந்து வாழ், மக்களுக்குப் பணியாற்று” என்று பேரறிஞர் அண்ணா கூறியதை மனதில் கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், உங்களுக்காக இயங்கக்கூடிய இந்த அரசு உங்களுக்கான அனைத்து தேவைகளையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும்.

இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், அதுதான் எங்களுடைய லட்சியம். அதுதான் எங்களுடைய இலக்கு. அதைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சமத்துவபுரம் ஒன்றைத் திறந்து வைத்துப் பேசும்போது, “இந்திய நாடு விடுதலை அடைந்து, பல்வேறு சட்டங்களும் – திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், சாதியும் மதமும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த சமத்துவபுரம் திட்டம்” என்றார்.

"இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும்.. அதுதான் எங்களுடைய லட்சியம்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதுமட்டுமல்ல, “சாதியும் மதமும் அற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவதோடு - தமிழ்நாடே சமுத்துவபுரமாகக் காட்சியளிக்க நாமெல்லாம் பணியாற்ற வேண்டும்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்கெல்லாம் அறிவுரையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அந்த இலக்கை நோக்கித் தான் சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படுகின்றன. அப்படி சீரமைக்கப்பட்ட ஒரு சமுத்துவபுரத்தை இன்றைய நாள் நான் உங்கள் அன்போடு, உங்கள் வாழ்த்துகளோடு திறந்து வைத்திருக்கிறேன்.

அண்மையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் துபாய் சென்றிருந்தேன். அங்குள்ள தமிழர்களிடம் நான் பேசும்போது ஒரு கருத்தைச் எடுத்துச் சொன்னேன்.

சாதியால், மதத்தால் பிளவுபடாமல் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

அனைவருக்குமான வளர்ச்சி - அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி - என்று நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்குக் காரணமே சமத்துவச் சிந்தனை தான்.

இந்தத் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். இந்த இந்திய நாடே சமத்துவ நாடாகவும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். இதற்குத் தமிழ்நாடும் நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று இந்த நேரத்திலே நான் எடுத்துச் சொல்லி, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே உங்களை எல்லாம் காணக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை நான் பெற்றமைக்கு மீண்டும், மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்போடு ஏற்பாடு செய்து, இங்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய இந்தத் துறையின் அமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், அரசு அலுவலர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories