தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தே.கமக்கபட்டியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே காமக்காபட்டியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞருக்கும் தனுஷ் (23) என்பவருக்கும் ஓர் ஆண்டிற்கு முன்பாக மீன் விற்பனையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில் திருவிழாவில் மது போதையில் தனுஷ், விக்னேஷிடம் தகராறில் ஈடுபட்டள்ளார். அப்பொழுது தனுஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் விக்னேஷ் படுகாயமடைந்த நிலையில், தடுக்க வந்த அவரது சகோதரர் தீபன் என்பவரையும் தனுஷ் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, அங்கு கூடியிருந்தவர்கள் விக்னேஷ் மற்றும் தீபனை மீட்டு அருகே உள்ள வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் பலியானார்.
இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும் தேவதானப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று விக்னேஷ் என்ற இளைஞரை கத்தியால் குத்திய தனுஷ் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவில் மது போதையில் கத்தியால் குத்தி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.