தமிழ்நாடு

சிறுமியை கடத்தி சில்மிஷம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.20,000 அபராதம்; மீறினால் மேலும் 6 மாதம் ஜெயில்!

11 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

சிறுமியை கடத்தி சில்மிஷம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.20,000 அபராதம்; மீறினால் மேலும் 6 மாதம் ஜெயில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2016ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பெருநகர காவல், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை, காணவில்லை என கடந்த 17.06.2016 அன்று சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் குடும்பத்திற்கு தெரிந்த நபர், சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி சிறுமியை அழைத்துச் சென்ற சேதுபதி (எ) சேது (எ ) ஞானசேகரன் (21) மற்றும் இவருக்கு உதவிபுரிந்த பாபு (21) ஆகியோரை பிடித்து, சிறுமியை மீட்டு, விசாரணை செய்ததில், சேதுபதி, காணமல் போன சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்பேரில், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, சேதுபதி , பாபு, ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (21.03.2022) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, சேதுபதி மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி சேதுபதி (எ) சேது (எ) ஞானசேகரன் என்பவருக்கு 366 சட்டப்பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் போக்சோ பிரிவு 6 சட்டப்பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை என்றும் இவை அனைத்தையும், ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், ஆக மொத்தம் குற்றவாளி சேதுபதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் 2வது குற்றவாளி பாபு இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலரை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

banner

Related Stories

Related Stories