உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலின்போது தி.மு.க தலைமைக் கழக அறிவிப்பை மீறி சில இடங்களில் தி.மு.கவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கையை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்று, கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் கடலூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.