தமிழ்நாடு

“Coding, Robotics பயிற்சி - பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வு” : ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனென்ன?

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான “நான் முதல்வன்” என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“Coding, Robotics பயிற்சி - பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வு” : ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் வெளியிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.

இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும். மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும். பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.

இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதுடன், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி / வேலைவாய்ப்பு குறித்த கையேடுகளை வழங்கியும் சிறப்பித்தார்.

banner

Related Stories

Related Stories