தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தன்வரலாறு நூலான "உங்களில் ஒருவன்" புத்தகம் வெளியீட்டு விழா நிறைவுக்குப்பின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., புறப்படுகையில், மறைந்த முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் ராகுல் காந்தி செல்வதற்கு வழிவிட்டு நின்றபோது, "நீங்களும் உடன் வாருங்கள்" என அவர் கரம் பிடித்து அன்போடு அழைத்து வந்த நெகிழ்வான தருணம் நடந்துள்ளது.
இந்நிகழ்வு கண்டு நெகிழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் பேரன்பு குறித்து நெகிழ்ச்சியில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எங்களது தமிழ் மக்களின் மீதும் எங்களது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் நீங்கள் எப்போதும் காட்டிவரும் பேரன்புக்கு மிகுந்த நன்றி ராகுல் காந்தி. உங்களுக்குப் பாதைவிடும் பொருட்டு தான் நிற்குமிடத்திலிருந்து சற்றே விலகிக்கொண்ட எங்களின் தாயார் மல்லிகா மாறன் அவர்களை நீங்கள் அதற்கு மாறாக உங்களோடு ஒன்றாக நடந்துவர அழைத்தபோது அதில் நீங்கள் எங்கள்மீது கொண்டுள்ள கண்ணியம்மிக்க பேரன்பினை உணர்ந்தோம்!" இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.