நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்., 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புறங்களில் இத்தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இதனால் 18-ஆம் தேதி அன்று கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 லட்சம் பேர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பொதுமக்கள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த அளவுக்கு இந்த தேர்தலில் வெளியூர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் குறைந்த அளவிலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு விரைவு பேருந்துகளிலும் எதிர்பார்த்த அளவிற்கு இடங்கள் நிரம்பவில்லை. ஆனாலும் பொதுமக்கள் நலன் கருதி கடைசி நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 18-ஆம் தேதி பொதுமக்களின் தேவையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.