தமிழ்நாடு

“நீட் ஒரு பலி பீடம்.. சமத்துவத்துக்கு முற்றிலும் முரணானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை முழு விவரம் !

அண்ணா அவர்களால் அரசியல் களத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நாம், இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக் கல்விக் கொள்கையை முன்மொழிவதற்காக இந்தச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இப்போது நாம் கூடியிருக்கிறோம்!

“நீட் ஒரு பலி பீடம்.. சமத்துவத்துக்கு முற்றிலும் முரணானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று
(8-2-2022) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் ஆற்றிய உரை:

முதலமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, இந்தியாவில் மக்களால் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆட்சிமுறை நிறுவப்பட்டபோது, சென்னை மாகாணத்திலும் தேர்தல் நடந்தது. 1920 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலம். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களெல்லாம் சென்னை மாகாணத்து சட்டமன்றம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வந்ததாகவும், அப்போது இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தின் நிர்வாக நெறிமுறைப்படி, சட்டத்தினுடைய ஆட்சி நடப்பதாகவும் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மக்களாட்சியின் விழுமியங்களை உருவாக்கிய மாமன்றத்தில் இந்த நாள் என்பது, மிக முக்கியமான நாளாகும். ஜனநாயகம் காக்க, மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றுவதற்காக, கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக, கல்வி உரிமையை வென்றெடுப்பதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம். ஏதோ நீட் தேர்வுக்கு எதிராக விவாதிப்பதற்காக மட்டும் நாம் கூடவில்லை. நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை, உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவும் கூடியிருக்கிறோம். பல்வேறு, இனம், மொழி, பண்பாடுகள் கொண்ட இந்தியப் பெருநாட்டை உண்மையில் காக்கும் உன்னதமான தத்துவம் என்பது கூட்டாட்சித் தத்துவம்! அந்தக் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம். பதினாறு வயதில் அரசியல் களத்தில் நான் நுழைந்தேன். எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அந்த உணர்வோடுதான் நான் இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு அடித்தளம் போட்டது இந்தச் சட்டமன்றம். நமது அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வர உந்து சக்தியாக விளங்கியது இந்தச் சட்டமன்றம். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு; பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு; சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு; அருந்ததியின சமுதாயத்திற்கு உள் இட ஒதுக்கீடு என சமூக நீதிக்கு வழங்கியது இந்தச் சட்டமன்றம். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு, ஒன்றிய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த வைத்ததும் இந்தச் சட்டமன்றம்தான். ஏன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் இந்தச் சட்டமன்றம்தான்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கியது இந்தச் சட்டமன்றம். அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவ இடங்களில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்திற்கே பெற்றுத் தந்ததும் இந்தச் சட்டமன்றம்தான். இன்றைக்கு இருக்கின்ற 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல்முறையாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி, சாதனை படைத்தது இந்தச் சட்டமன்றம். அதற்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியில் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது இந்தச் சட்டமன்றம்தான். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவுத் தேர்வை இரத்து செய்து, இதே சட்டமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அந்த நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் செல்லும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றமும், நம் நாட்டின் உச்ச நீதிமன்றமும் துணை நின்றதும் இந்தச் சட்டமன்றத்திற்குத்தான்.

நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கூறி, குடியரசுத் தலைவர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம், தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொண்டிருந்தோம். கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழைகளிலும், நடுத்தர வர்க்கத்திலிருந்தும் எண்ணற்றவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் பட்டம் பெற்று, இன்று பார் போற்ற, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சமூக நீதி, சட்ட நீதி, ஒடுக்கப்பட்டோர் உரிமை, தமிழினத்தின் மேன்மை, மொழி மேம்பாடு ஆகிய அனைத்துக்கும் அடித்தளம் அமைத்த இந்தச் சட்டமன்றத்தில் நின்று “நீட் என்ற சமூக அநீதியை அகற்ற, இந்தச் சட்டமன்றத்தால் முடியும்; நிச்சயமாக முடியும்” என்ற தன்னம்பிக்கையுடன் நான் பேசிக் கொண்டு இருக்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாதத்திற்குள் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம். இதேபோன்றுதான், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அதாவது, 1968 சனவரி 23 ஆம் நாள் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டினார், முதலமைச்சராக இருந்த பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அதில்தான், தமிழ்நாட்டு மாணவர்களின் தாகத்தைத் தீர்த்து, நமது மொழியுரிமையை நிலைநாட்டிய, வரலாற்றுப் பிரகடனமாக இருமொழிக் கொள்கையை நிறைவேற்றினார், பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.

அந்தத் தீர்மானத்தில், “பல்வேறு மொழி, பண்பாடு, நாகரிகங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு வட்டார மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பது; இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குலைத்து; ஒரு மொழிப் பகுதி மற்ற மொழிப் பகுதிகளை அடிமைகொள்ளச் செய்திடும் என்று உணரப்படும் காரணத்தால், தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சிமொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சட்டம், திருத்தப்பட வேண்டும். அது வரையில், ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருந்து வர வேண்டும். அதற்கு ஏற்றபடி, இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று இந்த மன்றம் வற்புறுத்துகிறது” என்றும், “தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, 'இந்தி' மொழியை அறவே நீக்கிட இம்மன்றம் தீர்மானிக்கிறது” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களால் அரசியல் களத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நாம், இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக் கல்விக் கொள்கையை முன்மொழிவதற்காக இந்தச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இப்போது நாம் கூடியிருக்கிறோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, சமூக நீதியை நிலைநாட்டிட, மாணவர்களின் மருத்துவக் கல்வி தாகத்தைத் தணித்திட கூடியிருக்கிறோம். நூற்றாண்டு கண்ட வரலாற்றுப் புகழ்மிக்க கொள்கை முடிவுகளை மேற்கொண்ட உன்னதமான இந்த அவையின் இறையாண்மையைக் காப்பாற்றிட, 8 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தச் சட்டமன்றத்திற்கு, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்திட நாம் இன்று கூடியிருக்கிறோம்.

நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற தேர்வு முறையும் கிடையாது. நீட் என்பது இந்திய மருத்துவக் கவுன்சில் ஒழுங்குமுறை விதிப்படி உருவாக்கப்பட்ட ஒரு தேர்வுதான். 2010-ஆம் ஆண்டு இப்படி ஒரு தேர்வு முறை முன்மொழியப்பட்டபோதே அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங்களும் எதிர்த்தது. இந்தியா முழுவதும் 115 வழக்குகள் இந்தத் தேர்வுக்கு எதிராகப் போடப்பட்டன. அப்படி வழக்குப் போட்டதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம். இந்த வழக்குகளை மொத்தமாக உச்சநீதிமன்றம் விசாரித்தது.

இந்தத் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றமே 18 ஜூலை 2013 அன்று தீர்ப்பளித்தது. அதுவும் உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதியரசரின் அமர்வே அந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்தோடு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அந்தத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசாக பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது. உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்தவுடனே, “Judgement is recalled” என்றும் “Hear this case afresh” என்றும்தான் 24.5.2016 அன்று உச்சநீதிமன்றம் கூறியது. இதன் அடிப்படையில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு 11.4.2016 அன்று ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்து - நாடு முழுவதும் நீட்டைச் செயல்படுத்தியது.

நீட் தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சாதகமானதுதான். இந்தத் தேர்வின் மூலமாக மாணவ - மாணவியரிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். அந்த நிறுவனங்களின் நன்மைக்காக மட்டுமே இந்தத் தேர்வு இன்றுவரை பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வளவு பணத்தைச் செலுத்தி பயிற்சி பெற முடியாதவர்களுக்காகத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம். மசோதாவைக் கொண்டு வருகிறோம். நீட் தேர்வு என்பது ஏழை - எளிய மாணவர்களது கல்வி உரிமைக்குத் தடை போடுகிறது. அவர்களது மருத்துவக் கனவில் தடுப்புச் சுவர் எழுப்புகிறது. “நீ டாக்டர் ஆக முடியாது” என்று தடுக்கிறது. “உனக்குத் தகுதியில்லை” என்று தடுக்கிறது. அதனால்தான் நீட் விலக்கு மசோதாவைக் கொண்டு வருகிறோம். அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகளை நான் இந்த மாமன்றத்தில் அதிகம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் நான் சிலவற்றைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக ஒன்றிய அரசே மக்களவையில் கூறியிருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்வது - வினாத்தாள்களை திருடுவது - விடைத்தாள்களை மாற்றி வைப்பது – என அனைத்து முறைகேடுகளும் நடந்துள்ளன. இதனை சி.பி.ஐ. வழக்காகவும் பதிவு செய்துள்ளது. நம்முடைய தமிழ்நாடு மட்டுமல்ல, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக உதித் சூர்யா என்ற மாணவரும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் 6 பேர், ஒரு இடைத்தரகர் என 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை நம் மாநில சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு இருக்கிறார்கள். கோவை மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது விஷயமாக வழக்கு தொடர்ந்தார். எதற்காக என்று கேட்டால் 700-க்கு என்னுடைய மதிப்பெண் 594 என்று அக்டோபர் 5-ஆம் தேதி இணையத்தில் காட்டுகிறது. அக்டோபர் 17-ஆம் தேதி 248 என்று காட்டுகிறது. இதுசம்பந்தமாக வழக்கு போட்டிருக்கிறார். தேர்வை நடத்தக்கூடியவர்கள் இதற்கு விளக்கம் தந்தாகவேண்டும். ஆனால் அதைப்பற்றிச் சொல்லாமல், வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு மனு போட்டார்கள். 9.2.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம், “நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு ஏன் மாற்றக் கூடாது” என்று ஒரு கேள்வி எழுப்பியது. இன்னொரு மாணவி தனது விடைத்தாள்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தான் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதிலளிக்காதது போல இருக்கிறது என்றும் வழக்கு போட்டார்.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 15 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே 3-12-2021 அன்று அறிவித்திருக்கிறது. கடந்த 29-9-2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 12 அன்று நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆள்மாறாட்டம் நடந்துள்ளது எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஆகவே, நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீட் தேர்வு ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை; பல்வேறு குளறுபடிகளோடு ஏழை–எளிய மாணவர்களைத் தகுதி என்ற பெயரில் ஓரங்கட்டக் கொண்டுவரப்பட்ட தேர்வு. அதனால்தான் இந்தத் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம்; அதிலிருந்து விலக்கு கோருகிறோம். நீட் தேர்வு என்பதை விட, அதை 'மாணவர்களைக் கொல்லும் தேர்வு' என்றே கூறிட வேண்டும். நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்களை, இந்தியாவின் வருங்காலத் தலைமுறையை நாம் இழந்திருக்கிறோம். அந்தக் குழந்தைகளை-இளம் பிஞ்சுகளை பெற்றோர்கள் மட்டும் பறிகொடுக்கவில்லை; நாமும் இழந்தோம்! தமிழ்நாடு மட்டுமல்ல; இந்திய நாடே பறிகொடுத்துள்ளது.

சில மாணவர்களைக் கல்லறைக்கும், சில மாணவர்களைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிய இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் இந்த மாமன்றத்தில் நான் எழுப்பக்கூடிய கேள்வி. நான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மாணவச் சமுதாயமும் பெற்றோர்களும் எழுப்பக்கூடிய கேள்வி. அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை நாம் நிறைவேற்றினோமே தவிர; ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றிவிடவில்லை. பல மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்மை பயக்கும். நீட் தேர்வு சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. இராஜன் தலைமையில் 10-6-2021 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்தக் கருத்துகளின் அடிப்படையில், 14-7-2021 அன்று இக்குழு 193 பக்க அறிக்கையை அரசுக்கு அளித்தது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே-அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு தரவுகளுடன் சொன்னது.

இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை அளிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் என்கிற முறையில் நான் அமைத்தேன். இறுதியில் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்ற மசோதா இந்தச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு விரிவாக ஆராய்ந்து, உரிய தரவுகளுடன்தான் இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம்.

மொத்தம் இந்த அவையில் இருக்கக்கூடிய 234 உறுப்பினர்களில், பேரவைத் தலைவர் அவர்களையும் சேர்த்து, 4 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை மட்டுமல்ல இந்த மாமன்றத்தின் இறையாண்மை உணர்வையும் எதிரொலித்தது. அதனை ஆளுநர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாறாக அதுகுறித்து எந்த முடிவெடுக்காமல் 142 நாட்கள் வைத்திருந்தார்கள். அதுகுறித்து, நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில், மீண்டும் நமக்கே திருப்பி அனுப்பி உள்ளார். அந்த மசோதாவை நிராகரிப்பதற்காக அவர் சொன்ன காரணங்கள், சரியானவை அல்ல என்பதை இந்த மாமன்றத்தில் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களே, நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை ஊகங்களின் அடிப்படையிலானது என்று தெரிவித்துள்ளார் ஆளுநர் அவர்கள். அரசாணை எண் 283, மருத்துவம்–மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துகளை இக்குழு கேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், அஞ்சல் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது கருத்துகளை வழங்கியிருந்தார்கள்.

இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு அரசுக்கு 14-7-2021 அன்று அளித்தது. அதாவது தனிப்பட்ட சிலரின் ஊகங்களின் அடிப்படையில் அல்ல; சுமார் ஒரு இலட்சம் பேரின் கருத்துகளைக் கேட்டுப் பெற்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பரிந்துரை அறிக்கையில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஊகம் அல்ல. இதற்கான புள்ளிவிவரமும் அந்த அறிக்கையில் விரிவாக உள்ளது.

அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் புள்ளிவிவரங்களோடு சொல்லப்பட்டுள்ளது.

‘நீட் தேர்வு தகுதிக்கு எதிரானது’ என்று இந்த அறிக்கை சொல்வதை ஆளுநர் விமர்சித்துள்ளார். இதனை மறுக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் நீதியரசர் ஏ.கே. இராஜன் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தேர்வானவர்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை சொல்கிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும்-நீட் தேர்வால் பலன் பெற்றவர்கள் என்று யாரும் தவறாகக் கணக்கிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுத் திறன் குறித்து இந்த அறிக்கையில் இல்லை என்று ஆளுநர் அவர்கள் கூறி இருக்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் அறிவியல் பிரிவு மாணவர்கள் அனைவருமே இந்த மூன்று பாடங்களையும் படிக்கிறார்கள். எனவே, இம்மூன்று பாடங்களில் தேர்ந்தவர்கள்தான் பன்னிரெண்டாம் வகுப்பில் உயர்ந்த இடங்களைப் பெறுகிறார்கள். அதனால்தான் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமானது என்று நாங்கள் சொல்கிறோம். இன்னொரு தேர்வு தேவையில்லை என்று நாம் இங்கே குறிப்பிடுகிறோம். நீட் தேர்வு வருவதற்கு முன்பு, 90 விழுக்காட்டுக்கும் மேலான இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள்தான் பெற்று வந்தார்கள். ஆனால், நீட் தேர்வுக்குப் பின்னர், மருத்துவப் படிப்பில் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கருப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எத்தகைய பாகுபாடோ-அதைப்போல மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் படித்தவர்களது புத்தகங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்காததும் மிகப்பெரிய பாகுபாடுதான்.

நீட் என்பது கல்விமுறை அல்ல. அது பயிற்சிமுறை. இது தனியார் பயிற்சி மையங்களைத்தான் ஊக்குவிக்கும். தனிப் பயிற்சி பெற முடியாதவர்கள், கல்வி பெறத் தகுதியற்றவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது.

ஒரு மாணவர் இரண்டு மூன்று ஆண்டுகள் தனிப் பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்; இலட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை எளிய மாணவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? என்பதுதான் திரும்பத் திரும்ப நாம் எழுப்புகிற கேள்வியாகும்.

கட்டணம் செலுத்திப் பயிற்சி எடுக்க முடியாதவர்களால் மருத்துவப் படிப்புக்கு உள்ளே நுழைய முடியாது என்பதே-கட்டணம் செலுத்தி இரண்டு மூன்றாண்டு காலம் பயிற்சி பெற முடிந்தவர்களால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்பதே-இந்த 21 ஆம் நூற்றாண்டில் மாபெரும் அறிவுத் தீண்டாமை! தகுதி என்ற போர்வையில் உள்ள இந்தத் தீண்டாமை அகற்றப்பட வேண்டாமா? அதற்காகத்தான் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் இங்கே நாம் கொண்டு வந்திருக்கிறோம்.

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கைப் பற்றி இந்த அவையில்கூட எல்லோரும் பேசினார்கள். ஆளுநர் அவர்கள் அந்த வழக்கை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானதா நீட் தேர்வு என்பது தொடர்புடையதாகும். அந்த வழக்கு மாநிலச் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்தது அல்ல. ஆகவே, அந்த வழக்கிற்கும், நாம் கொண்டு வரவிருக்கக்கூடிய நீட் விலக்கு மசோதாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

மாடர்ன் பல் மருத்துவமனைக்கும், மத்திய பிரதேச அரசுக்குமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்வில் நடந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று தீர்ப்பளித்தது. அதே வழக்கில் நீதியரசர் பானுமதி வழங்கிய தனித்தீர்ப்பில், மாணவர் சேர்க்கையை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம், மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே என்று அவர்கள் தீர்ப்பளித்தார்கள். மாநில சட்டமன்றத்திற்கு இருக்கக்கூடிய சட்டமியற்றும் அதிகாரத்தின்படிதான் நாம் - நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை நிறைவேற்றி இருக்கிறோம்.

அரசமைப்பு ரீதியாக நீட் தேர்வு தேவைப்படுவதாக ஆளுநர் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களது உரிமைக்காக எந்தச் சட்ட ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்த சட்டமசோதாவை மீண்டும் கொண்டு வருகிறோம். அரசியலமைப்புச் சட்டம், பாகுபாட்டுக்கு எதிரானது. ஆனால், நீட் தேர்வு பாகுபாடு காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதியை வலியுறுத்துகிறது. ஆனால், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. ஆனால், நீட் தேர்வு, பணக்கார நீதியைப் பேசுகிறது. சமத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதம். ஆனால், நீட் தேர்வு, சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது நீட் தேர்வு. அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். என்னுடைய வேதனையெல்லாம், ஏழை – எளிய - கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மிக மோசமான ஒரு தேர்வு குறித்து - அது மோசமானதுதான் என்று இவ்வளவு நீண்ட நேரம் வாதிட வேண்டியதாக இருக்கிறதே என்பது தான் என் வருத்தம். நாம் சொல்வது புரிய வேண்டியவர்களுக்கு, இன்னமும் புரியாமல் இருக்கிறதே என்பதுதான். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, டெல்லி அமைச்சர் ஒருவரிடம், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை விவகாரம் பற்றி போன் செய்து பேசினாராம். அப்போது எதிர்முனையில் பேசியவருக்கு, கள்ளக்குறிச்சி என்ற பெயரைப் புரிந்துகொள்ளவே 15 நிமிடம் ஆனது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதே மாதிரி நீட் தேர்வின் மோசமான அம்சங்களையே நாம் ஐந்தாண்டுகாலமாக விளக்கிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை. உண்மையில், புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆனால், நாம் வெற்றி பெறும்வரை நமது இந்தப் போராட்டத்தை விடமாட்டோம் என்பதை இந்த மாமன்றத்தில் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இது ஏதோ நீட் விவகாரம் மட்டுமல்ல என்பதை நான் தொடக்கத்தில் சொன்னேன். ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றினோம் - அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று மட்டும் நான் இதைப் பார்க்கவில்லை. யாரும் அப்படிப் பார்க்க மாட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். இந்தச் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பியதன்மூலமாக நமது தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது. அதுதான் வேதனைக்குரியது. அதுதான் கவலையளிக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான, வழிகாட்டியான தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால், இந்த இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன? அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்? பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா? "பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்?" என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் நம்முடைய இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு. அதனைச் சிதைக்கலாமா? இவற்றையெல்லாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வலிமையான அரசா, நேர்மையான அரசா என்றால், நேர்மையான அரசுதான் அனைவரும் விரும்பும் அரசாக இருக்க முடியும். வலிமையான சாம்ராஜ்யங்கள் வரலாற்றின் பக்கங்களில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், பாகுபாட்டுக்கு எதிரான அசோகர்தான், மக்களால் இன்றும் நினைக்கப்படுகிறார். பலதரப்பட்ட மனிதர்களை உள்ளடக்கிய இந்திய நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சியாக சமீபகாலக் காட்சிகள் அமைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்த நேரத்தில் நான் சிறிது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். சமூகநீதி மட்டும்தான் திராவிட இயக்கத்தின் கொடை என்று சிலர் நினைக்கிறார்கள். மாநில சுயாட்சியும் திராவிட இயக்கத்தின் கொடைதான். 1918 அக்டோபர் 2 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசியவர், நீதிக்கட்சித் தலைவரான திரு. டி.எம்.நாயர் அவர்கள். அவர்தான் 1917-ஆம் ஆண்டிலேயே மொழிவாரி மாநிலங்களுக்காகக் குரல் கொடுத்தார். மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். அப்படிச் செய்தால்தான் கூட்டாட்சி முறை வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அத்தகைய முன்னோடித் தலைவரான டி.எம்.நாயர் அவர்களை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் சொல்லி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் மாநிலங்களின் உரிமைக்காக இன்னமும் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம்! நிதி ஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவின் மீது 15-7-1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே மாமன்றத்தில் உரையாற்றியபோது, “மத்திய சர்க்காருக்கும், மாநில சர்க்காருக்கும் உள்ள தொடர்புகள் எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் – சட்டப்படி இருக்கின்ற தொடர்புகள், நடைமுறையிலே உள்ள தொடர்புகள் இவைகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் சட்டத்தையே கூட திருத்த வேண்டுமென்றாலும் அதற்கும் தயக்கம் கூடாது. அதற்கான ஒரு கமிஷன் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இதுவரை வலியுறுத்திக் கொண்டு வந்ததைப் போலவே இனியும் வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அப்படி முழங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களை வியப்போடு நான் திரும்பிப் பார்க்கிறேன்.

“நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் மாநில சுயாட்சி அடிப்படையில் மத்திய - மாநில உறவுகளை ஆராய” சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார் அவர்கள் தலைமையில் 22-9-1969 அன்று குழு அமைத்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 27-5-1971 அன்று ராஜமன்னார் குழு அறிக்கையை அன்றைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். அந்த அறிக்கையைப் பெற்றுக் கொண்டு, “These are important issues and we intend to consult all the Chief Ministers” என்று பதிலளித்து 22-6-1971 அன்று பெறப்பட்ட கடிதம் இந்த அவையின் குறிப்புகளை அலங்கரிப்பதை புரட்டிப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன். அனைத்திற்கும் மேலாக, மாநில சுயாட்சித் தீர்மானம் 16-4-1974 அன்று இதே அவையில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 20 ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வாதங்களை மீண்டும் படித்துப் பார்த்து, இந்தச் சட்டமன்றத்தின் நீண்ட நெடிய வரலாற்றை எண்ணிப் உள்ளபடியே நான் பெருமிதப்படுகிறேன்.

அதிலும் குறிப்பாக, தீர்மானத்தின் மிக முக்கியமான வாசகமாக, “மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் ராஜமன்னார் குழு அறிக்கையை ஏற்று, இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இந்தப் பேரவை முடிவு செய்கிறது” என்று முன்மொழிந்த தலைவர்தான் நம்முடைய தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அதையும் நினைத்துப் பார்க்கிறேன். மாநிலங்கள் மட்டும் அல்ல, மத்திய அரசுத் தேவையான அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்? இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்க்கும் நெல்லிக்கனியாகத்தான் இன்று, இந்த மாபெரும் சபைதனில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முத்தமிழறிஞர் எத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பதை எண்ணி எண்ணிப் பெருமைக் கொள்கிறேன்.

அன்றைய நாள், “இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் சுடர் விளக்கு ஒளிவிட வேண்டும்” என்றவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அதைத்தான் இன்றைக்கு நாம் எதிர்பார்க்கிறோம். நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலமாக இந்தியாவுக்கே ஒரு ஒளிவிளக்கை நாம் ஏற்றி வைக்கிறோம். தி.மு.க. எதிர்க்கட்சியாகவும், அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும் அன்றைய தினம் இருந்தாலும், நாம் இணைந்து, ஒருமுகமாக நின்று நீட் விலக்கு மசோதாவை கடந்த 1-2-2017 அன்று இதே அவையில் நிறைவேற்றினோம்.

அந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் 27 மாதங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டது. இறுதியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதே இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கலாம். அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதைப்பற்றியெல்லாம் நான் இப்போது பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. இந்தச் சூழலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்தோம். அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று நிறைவேற்றி அனுப்பினோம். அரசியல் சட்டப்படி ஆளுநர் அவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன? இதை நான் சொல்வதை விட, ஒன்றிய - மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரையில் சொல்லப்பட்டுள்ளதை இந்த அவையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ள பொருள் குறித்து மாநிலச் சட்டமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாக்கவே அரசியல் சட்டத்தில் 254 (1) என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றினால், அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கக்கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தலாம். மாநில அமைச்சரவை அப்படி அறிவுறுத்தினால், ஆளுநர் அதன்படி உடனடியாகச் செய்தாக வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களே, அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் மாநிலச் சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றினால், அரசியல் சட்டப்பிரிவு 200-ன்கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். 'The Governor must abide by the advice of the Council of the Ministers.'

ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு தன் சொந்தக் கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல், அமைச்சரவை என்ன அறிவுரை வழங்குகிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். அதைத்தான் 2006 இல் இருந்த ஆளுநர் அவர்கள், 'நுழைவுத் தேர்வு ரத்து' என்று சட்டமுன்வடிவை நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து இந்தச் சட்டமன்றம் நிறைவேற்றி அந்த வரலாற்றைப் படைத்திருக்கிறார்.

நமக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில்தான், 13-9-2021 அன்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கச் சட்டமுன்வடிவினை நாம் நிறைவேற்றினோம். அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்டக் கடமை. அந்தக் கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என நான் நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன். நாம் மட்டுமல்ல, நீங்களும் எதிர்பார்க்கலாம். அதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின், சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டு ஆளுநர் நிறைவேற்ற வேண்டிய கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்பதால் நானே நேரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன். ஆளுநரிடம் பல முறை நான் வலியுறுத்தியிருக்கிறேன். நம்முடைய மூத்த அமைச்சர், அவையின் முன்னவர், துரைமுருகன் அவர்களும் நேரில் சந்தித்து ஆளுநரை வலியுறுத்தினார். நம் மாநில எம்.பி.க்கள் எல்லாம் குடியரசுத் தலைவரை சந்திக்க முயற்சி செய்து, அவரது அலுவலகத்தில் மனுவினை அளித்து வலியுறுத்தினார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து விளக்கியிருக்கிறோம். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.-வைச் சேர்ந்த எம்.பி.க்கள், அதேபோன்று பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய எம்.பி.க்கள் அனைவரும் நேரடியாகச் சென்று, சொல்லியிருக்கிறோம். இந்தநிலையில்தான், ஏறக்குறைய 142 நாட்கள் கழித்து, 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பி, மீண்டும் சட்டமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர் அவர்கள். இந்த அசாதாரணச் சூழலில், அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய சட்டமியற்றும் அதிகாரத்தைக் கேள்வி கேட்கக்கூடிய வகையில் ஆளுநர் அவர்களின் செயல் இருக்கிற காரணத்தினால், கடந்த 5-2-2022 சனிக்கிழமை அன்று அனைத்துக் கட்சியைச் சார்ந்த சட்டமன்றக் கட்சியில் இடம் பெற்றிருக்கின்ற தலைவர்களின் கூட்டத்தினை நடத்தினோம். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான், இன்றைக்கு 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவினை இந்த அவையில் மீண்டும் நான் முன்மொழிகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 30-3-1967 இல் இதே அவையில், ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பேசியபோது, “கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில், ஒரு பகுதி இன்றையதினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்திப்பார்க்கிறேன்.

அது போன்றதொரு சூழலை, நமது ஆளுநர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவினை காலம்தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நான் நம்புகிறேன். காலம் காலமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையைக் காக்க, தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைக் காக்க, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய, விளிம்பு நிலை, கிராமப்புற மக்களின் நலனைக் காக்க, இந்தச் சட்டமுன்வடிவை அனைவரும் நிறைவேற்றித்தர வேண்டும் என்று உங்களை எல்லாம், மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

'மாநிலங்கள் அதிகளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்' என்ற பேரறிஞரின் அண்ணாவின் இலக்கை அடையவும், 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்ற கலைஞரின் முழக்கத்தை வென்றெடுக்கவும், இந்த நாள் மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வடிவை முன்மொழிவதன் மூலமாக நானும், அதனை ஆதரித்து வாக்களிப்பதன் மூலமாக நீங்களும் செய்யும் செயல் என்பது, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றும். ஒற்றையாட்சித் தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற்றப்படாமல் தடுக்கும். இறையாண்மை என்பது மக்களாட்சியில் சட்டமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரம் என்பதை நிலைநாட்டும். இந்தியத் துணைக்கண்டமானது அனைத்து தேசிய இனங்களுக்குமான நாடு என்பதைப் பிரகடனப்படுத்தும். அத்தகைய அரசியல் சட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாளை மாற்றியமைக்க வாய்ப்பளித்த பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இந்திய மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் பெரும் பொறுப்பைச் செய்வதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்ப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! நன்றி, வணக்கம்.

மு.க. ஸ்டாலின்: பேரவைத் தலைவர் அவர்களே, இன்று தங்களால் அவைமுன் வைக்கப்பட்ட 1-2-2022 ஆம் நாளிடப்பட்ட ஆளுநரின் செய்தி உரையுடன், திருப்பியனுப்பப்பட்ட 13-9-2021 அன்று பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்பெற்ற 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு (சட்டமுன்வடிவு எண் 43/2021) ஆகிய இரண்டின் மீதும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒருமித்த கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக நன்றியை முதற்கண் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். 1-2-2022 ஆம் நாளிடப்பெற்ற ஆளுநர் அவர்களின் செய்தி உரையில் தெரிவிக்கப்பெற்றுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்பது இப்பேரவை உறுப்பினர்கள் அனைவரது கருத்தாக அமைந்துள்ளது. எனவே, 13-9-2021 ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பெற்று, ஆளுநர் அவர்களால் 1-2-2022 ஆம் நாளன்று திருப்பியனுப்பப்பெற்ற 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன் வடிவு சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021 மறு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப் பெற வேண்டுமெனக் கோருகின்றேன்.

Related Stories

Related Stories