தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 28ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். நேற்று மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் சுமார் 75,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி நடக்கிறது. விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளுக்கு 308 பேர், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 238 பேர், கோட்டக்குப்பத்தில் 27 வார்டுகளுக்கு 161 பேர் என மொத்தம் நகராட்சி வார்டுகள் 102 பதவிகளுக்கு 707 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி 4வது வார்டில் பா.ஜ.கவை சார்ந்த சரவணன் என்பவரின் மனைவி பவானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பவானி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
பா.ஜ.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பவானிக்கு விழுப்புரம் நகராட்சியின் எந்த வார்டிலும் வாக்கு இல்லை என்றும், புதுச்சேரியில் அவருக்கு வாக்கு உள்ளதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.