தமிழ்நாடு

”உணவுகள் தரமற்று இருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ டெண்டர் ரத்து” - அமைச்சரின் எச்சரிக்கை யாருக்கு?

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

”உணவுகள் தரமற்று இருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ டெண்டர் ரத்து” - அமைச்சரின் எச்சரிக்கை யாருக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளியூர் பயண வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்றாலோ தரமற்ற உணவுகளை வழங்கினாலோ டெண்டர் ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

பொங்கலை முன்னிட்டு சென்னையில் 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் 3797 சிறப்பு பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து 6612 பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட உள்ளது. இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கும் புகார் தெரிவிப்பதற்கும் 94450 14 450, 94450 14436, ஆகிய தொலைபேசி எண்களில் 24 மணிநேரமும் தொடர்புக்கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044 2474 9002 என ஆகிய எண்களில் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் செல்வதற்கு ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இணைப்பு பேருந்தில் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியூர் பயண வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கினாலும் அதிக விலைக்கு உணவுகளை விற்றாலும் உணவகங்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள்.

அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பேருந்துகளில் பின்பற்றப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

banner

Related Stories

Related Stories