தமிழ்நாடு

"Tamilnadu No.1 - முன்பை விட கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

செயலாற்றலில் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து அறிவித்துள்ள `இந்தியா டுடே’வின் ஆய்வு முடிவினை ஏற்று நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

"Tamilnadu No.1 - முன்பை விட கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புகழ்பெற்ற ஆங்கில இதழான `இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில்- செயலாற்றலில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவினை ஏற்று நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

`இந்தியா டுடே’ ஆங்கில இதழ் நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் செயலாற்றலில் பொருளாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம், ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல், தூய்மை, தொழில் முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்ட துறைகளில் எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாகக் கையாள்கின்றன என்ற பட்டியலை வெளியிட்டு, இவற்றில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்வதாக அதன் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரைவருமாறு:

“இந்தியாவின் தலைசிறந்த ஆங்கில இதழ்களில் ஒன்றான ‘இந்தியா டுடே’ இதழின் இயக்குநர் ராஜ்செங்கப்பாஅவர்களே! அதன் ஆசிரியர் அமர்நாத் கே.மேனன் அவர்களே! இந்தியா டுடே ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் நிருபர்களே! பத்திரிக்கையாளர்களே! இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார, கலை மற்றும் பண்பாட்டுத் தட்பவெப்பங்களைச் சொல்கின்ற தலைசிறந்த இதழான ‘இந்தியாடுடே’யின் சார்பில் வழங்கப்படும் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘இந்தியா டுடே’ இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ் செங்கப்பா அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாட்டைக் கணித்ததாகவும் - அதில், ஒட்டுமொத்த செயல்திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கே கிடைத்த பெருமை!

இதைப் படித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமைஅல்ல; ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமை ஆகும். தமிழ்நாட்டுக்குக் கிடைத்த சிறப்பு ஆகும்!

‘இந்தியா டுடே’ வழங்கிய இந்த விருதை, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்க விரும்புகிறேன். நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாபெரும் நெருக்கடி காலமாக அது இருந்தது. நிதி நெருக்கடியும், மருத்துவ நெருக்கடியும் சேர்ந்து வதைத்தது. 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிர்வாகமாகவும் இருந்தது.

அத்தகைய சூழலில் அரசின் துரிதமான நடவடிக்கையாலும் - மக்களின் தியாக உணர்வாலும் கொரோனாவை வென்றோம். ஊரடங்கு மூலமாக வாழ்வாதாரம் இழந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் உதவிகள் செய்துகொண்டே கொரோனாவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தோம். அப்போது, இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் என்னைப் பாராட்டி எழுதினார்கள். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் - நம்பர் 1 முதலமைச்சர் என்றும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார்கள். அதுதொடர்பாக என்னை ஊடகத்தினர் கேட்டபோது, ‘நான் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாடு நம்பர் 1ஆக வேண்டும், அதுதான் என்னுடைய விருப்பம்’ என்று நான் சொன்னேன்.

முன்பைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டும்!

அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியா டுடே இதழானது, தமிழ்நாடு நம்பர் ஒன் என்று அறிவித்துள்ளது மிகமிக மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது. நம்பர் 1 என்று சொன்னபிறகுதான் எனக்கு பயமே வருகிறது. இதனைத் தக்கவைப்பதற்காக முன்பை விடக் கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும் என்று நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

பத்து ஆண்டுகளாக மிகமிக மோசமான நிலையில் - அனைத்துத்துறைகளிலும் பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டெடுப்பது என்பது சாதாரணமானது அல்ல. நாளைக்கே நடந்து விடும் என்று நம்பும் கற்பனாவாதியும் அல்ல நான். சரியான இலக்கை வைத்து - தொடர்ச்சியாக உழைத்தால், தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனை நோக்கித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்; ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

"Tamilnadu No.1 - முன்பை விட கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சமூகம் - கல்வி - பொருளாதாரம் -தொழில் வளர்ச்சி - தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய அனைத்திலும் ஒருசேர வளரவேண்டும் என்பதுதான் எங்களது ஆட்சியின் இலக்கணம் ஆகும். அனைத்துத்துறையும் வளர வேண்டும் - அனைத்துச் சமூகமும் மேம்பாடு அடைய வேண்டும் -அனைத்துத் தொழில்களும் சிறக்கவேண்டும் - அனைத்து மாவட்டங்களும் செழிக்கவேண்டும் - என்பதுதான் எங்களது இலக்கு!

இந்த இலக்கை அடைவதற்காக எங்களை நாங்களே ஒப்படைத்துக் கொண்டுள்ளோம். இந்த இலக்கு என்பது, தனிப்பட்ட ஒரு முதலமைச்சரின் இலக்காக இல்லாமல் - ஒரு அமைச்சரவையின் இலக்காக மட்டும் இல்லாமல் - அனைத்து அரசு அதிகாரிகளின் இலக்காக மாறி உள்ளது. இத்தகைய சிந்தனையை மக்கள் மனதிலும் விதைத்துள்ளோம். முதலமைச்சரான என்னில் தொடங்கி, கடைக்கோடி மனிதர் வரைக்கும் தலைசிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளோம்.

தொழில் துறையிலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளிலும், சமூகக் குறியீடுகளிலும், இந்தியாவில் தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விரைவில் முன்னெடுக்கப்படும். அதற்கான ஊக்கசக்தியாக `இந்தியா டுடே’ வழங்கிய விருது அமைந்துள்ளது. மாநிலங்களின் நிலைகுறித்து நாங்கள் எந்த மாதிரியான ஆய்வைச் செய்கிறோம் என்பதை நீங்கள் விளக்கி உள்ளீர்கள். அத்தகைய அனைத்து ஆய்வுகளிலும் தமிழ்நாடு முந்திச்செல்வதை நீங்கள் கணித்துள்ளீர்கள். `இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு வெளியிட வேண்டும்!

இத்தகைய கணிப்புகளின்போது உங்களுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கும். அதில் நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டியவைகளும் இருந்திருக்கும். அவற்றையும் தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எத்தகைய ஆலோசனைகளையும் -திறந்த மனத்துடன் பரிசீலிக்க தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு விருது கொடுத்த இந்த நேரத்தில், ‘இந்தியா டுடே’க்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். பல்லாண்டுகளாக வெளியாகிவந்த `இந்தியா டுடே’வின் தமிழ்ப் பதிப்பை திடீரென்று நிறுத்திவிட்டீர்கள். விரைவில் மீண்டும் ‘இந்தியா டுடே’யின் தமிழ்ப்பதிப்பு வெளியாக வேண்டும் என்ற எனது ஆசையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் சிறப்பை, மேன்மையை, மாற்றத்தை, இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல ‘இந்தியா டுடே’ இதழ் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு - ஆசிரியர் குழுவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்."

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories