தமிழ்நாடு

சிங்கப்பூர் - சென்னை இடையே விமான போக்குவரத்து... 20 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடக்கம்!

சிங்கப்பூா் - சென்னை விமான போக்குவரத்து 20 மாதங்களுக்கு பின்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

சிங்கப்பூர் - சென்னை இடையே விமான போக்குவரத்து... 20 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சிங்கப்பூா் - சென்னை விமான போக்குவரத்து 20 மாதங்களுக்கு பின்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதையடுத்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் அனைத்தும் கடந்த 2020 மாா்ச் 25ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலும் அனைத்து சா்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

அதன்பின்பு கடந்த 2020 மே 9ஆம் தேதியிலிருந்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வந்தே பாரத் மீட்பு விமானங்களும், சில சிறப்பு விமானங்களும் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சா் கடந்த வாரம் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், சென்னையிலிருந்து சிங்கப்பூா், மலேசியா நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகளை உடனே தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாடுகளில் தமிழா்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனா் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு வரும் டிசம்பா் மாதம் 15ஆம் தேதியிலிருந்து அனைத்து சா்வதேச விமான சேவைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதோடு சிங்கப்பூா்-இந்தியா இடையே விமான சேவைகள் உடனடியாக தொடங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்றிலிருந்து தினமும் விமான சேவைகளை சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமான நிறுவனமும், இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனமும் தொடங்குகின்றன.

சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்து சோ்கிறது. மீண்டும் இரவு 11.15 மணிக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூா் புறப்பட்டு செல்கிறது.

அதேபோல் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மாலை 3 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னைக்கு திரும்பி வருகிறது.

சென்னை-சிங்கப்பூா்-சென்னை இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானம் கடந்த 2020 மாா்ச் 25 ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது 20 மாதங்களுக்கு பின்பு மீண்டும் சென்னை-சிங்கப்பூா்-சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகள் தொடங்கியுள்ளன.

இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு, அதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். அதோடு 48 நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழும் அவசியம்.

சிங்கப்பூா் விமான சேவை தொடங்கியதால், சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கும் இது இணைப்பு விமானமாக இருக்கும்.

இந்த விமான சேவையால் தமிழக பயணிகள் மட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் இன்றிலிருந்து டெல்லி, மும்பையிலிருந்தும் சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.

banner

Related Stories

Related Stories