தமிழ்நாடு

“அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம். அப்படி மாற்றுகிற நேரத்தில் அதில் முதலிடம் கோவைக்குத்தான் உண்டு என்பதைச் சொல்ல விரும்புகிறேன்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“இன்று காலையில் 9.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு நீதியரசர் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் காலையில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தைப் பிடித்து சரியாக 11.30 மணியளவில் நான் கோவை விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தாலும், அங்கிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு ஏறக்குறைய இரண்டரை மணி நேரம், மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது. காரணம் வருகிற வழியெல்லாம் சாலையில் இருமருங்கிலும் பொதுமக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எங்களை வரவேற்றனர். அதையெல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல், ஆனால், கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறேன். அந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், நிதி உதவிகளைச் செய்திடவும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை நடத்திடவேண்டும் என்று முடிவு செய்து, 22-ஆம் தேதி காலையில் நான் கோவைக்கு வரவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் என்னிடம் தேதி கேட்டார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். அவர் நிகழ்ச்சியைத்தான் நடத்தப் போகிறேன் என்று என்னிடத்தில் சொன்னார். ஆனால் இன்றைக்கு நடப்பது நிகழ்ச்சியல்ல, ஒரு மாநாடே நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது அமைந்திருக்கிறது. அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் சாதாரணமாக நிகழ்ச்சி என்று சொன்னாலே அது மாநாடுதான். ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட இருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது என்று சொன்னாலும், ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், இதை ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருக்கக்கூடிய, வெறும் வெற்றியல்ல, முழு வெற்றி கண்டிருக்கக்கூடிய செந்தில்பாலாஜி அவர்களை, அதேபோல் அவருக்கு துணைநின்று கொண்டிருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை, அரசு அலுவலர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனைத்து மாவட்டங்களிலும் நமக்குப் பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும் - இந்தக் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நாம் நினைத்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. அதையெல்லாம் இங்கே விரிவாகப் பேசி இதை அரசியலாக்க நான் தயாராக இல்லை, காரணம் இது அரசு விழா. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட மாவட்டமாக கோவை இருந்தாலும் - கோவையில்தான் இத்தகைய மாபெரும் மாநாடு போன்ற மக்களை சந்திக்கக்கூடிய நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன் என்பதுதான் முக்கியம்.

ஆட்சிக்கு வந்தவுடனேயே நான் சொன்னேன், என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை லயோலா கல்லூரிக்குச் நேரடியாகச் சென்று, ஓட்டு எண்ணக்கூடிய இடத்தில் அந்த சான்றிதழை வாங்கிக் கொண்டு, நான் சென்ற முதல் இடம் நம்முடைய கலைஞர் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக்கூடிய அவருடைய நினைவிடம்தான். அங்கு மரியாதை செய்துவிட்டு, வணக்கம் செலுத்திவிட்டு, வெளியில் செல்கின்றபோது பத்திரிகை நிருபர்கள் என்னை சூழ்ந்துகொண்டு, “பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள், உங்கள் செய்தி என்ன?” என்று என்னிடத்தில் கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், வெற்றி தந்த மக்களுக்கு என்னுடைய நன்றி, நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வோடு ஓட்டுபோட்டவர்களுக்கு மட்டுமல்ல, எங்களை எதிர்த்து ஓட்டு போட்டிருப்பவர்கள், ஓட்டுபோடாதவர்களுக்கும் சேர்த்துப் பணியாற்றுவதுதான் என்னுடைய வெற்றி, அதில் உறுதியாக இருப்பேன் என்று நான் சொன்னேன். எந்த வேறுபாடும் நாங்கள் பார்க்கமாட்டோம் என்று நான் சொன்னதைத்தான் இன்றுவரையில் அல்ல, தொடர்ந்து அப்படித்தான் கடைப்பிடிப்பேன், நம்முடைய ஆட்சி இருக்கின்றவரை அப்படித்தான் கடைப்பிடிப்பேன், அதில் எந்த மாற்றமும் கிடையாது.

அப்படித்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் எங்களை வளர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த கோவை மாவட்டத்து வளர்ச்சிப்பணிகளை பார்ப்பதற்காக - கவனித்து அவ்வப்போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நான் நியமித்திருக்கிறேன்.

எந்தெந்த மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதிகள் இல்லையோ, அந்தந்த மாவட்டங்களுக்கு இதுபோல் அமைச்சர்களை நாங்கள் பொறுப்பேற்று பணியாற்றவேண்டுமென்று கட்டளையிட்டு அவர்களை நியமித்திருக்கிறோம்.

அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என்ற உணர்வோடு நான் இத்தகைய நியமனத்தைச் செய்திருக்கிறேன்.

அப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் - கடந்த ஒருவாரகாலமாக இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துபேசி, அரசு அதிகாரிகளோடு ஆய்வு நடத்தி, அந்த அடிப்படையில் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதனை நிறைவேற்றித் தருவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரை, ஒரு மனுவைக் கொடுத்தால், அந்த மனு மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். முடிந்த பணிகளை முடிந்தது என்று சொல்லுவோம். சில சட்டச் சிக்கல், நீதிமன்றத்தின் தலையீடு போன்று பல பிரச்சினைகள் சில திட்டங்களுக்கு, சில பணிகளுக்கு வந்துவிடும். சில பணிகள் காலதாமதாமாக முடிவடையக்கூடிய நிலைக்கும் வந்துவிடும். எனவே, இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் உறுதியளிப்பது என்னவென்று கேட்டால், உறுதி அளிப்பதற்கு எனக்கு முழு தகுதி இருக்கிறது.

காரணம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றேன். வாங்கிய மனுக்களையெல்லாம் மக்கள் முன்னால் பெட்டியில் வைத்து பூட்டினேன். நான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக இந்தப் பெட்டியைத் தான் திறப்பேன். அனைத்து மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னேன். 'ஸ்டாலினால் இந்தப் பெட்டியைத் திறக்க முடியாது, அவர் மக்களை ஏமாற்றுகிறார்' என்று அரசியல் நோக்கத்தோடு அரசியல்வாதிகள் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள், யார், எப்படி அப்படி என்ற விளக்கமெல்லாம் தேவையில்லை. நான் அப்போதும் சொன்னேன், 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' இதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தாரக மந்திரமாக எங்கள் உள்ளத்திலே பதிய வைத்திருக்கிறார்.

அதேபோல் ஆட்சி அமைத்த அன்றைக்கே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித் துறையை நாங்கள் உருவாக்கினோம். அனைத்துப் பெட்டிகளையும் திறந்தோம். இலட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஊடகங்களில் தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் தெரிந்துகொண்டிருக்க முடியும். மக்களிடத்திலே போய் பேட்டிக் கேட்கின்றபோது அவர்களே சொல்கிறார்கள், 'ஸ்டாலினிடம் நான் மனு கொடுத்தேன், 100 நாட்களில் அதனைத் தீர்த்து வைத்துவிட்டார்' என்று பேட்டி கொடுக்கக்கூடிய அந்த காட்சிகளெல்லாம், அந்த நிகழ்ச்சிகளெல்லாம் தொடர்ந்து தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிறது.

“அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதே நேரத்திலே நிறைவேற்ற இயலாத கோரிக்கையாக இருந்தாலும் - அதுதொடர்பாக மனு கொடுத்தவருக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிடம் இப்போதும் பலர் மனுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் எல்லாம் வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆங்காங்கே சில தோழர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளிக்கும்போது, அங்கு நான் நின்று அவர்களிடமிருந்து நான் வாங்கிவிட்டுதான் வந்திருக்கிறேன். இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை மீண்டும் இந்த விழாவின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மிகப்பெரிய திட்டங்களை - பலகோடி மதிப்பிலான திட்டங்களை நாங்கள் போட்டாலும், இதுபோல் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றுவதுதான் முக்கியம். அப்படி நிறைவேற்றித்தர வேண்டும் என்று நான் அமைச்சர்களுக்கெல்லாம் தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மக்கள் மாநாட்டின் வாயிலாக கோவை மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தொடங்கி வைப்பதில், அதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

❖ கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு 1,132 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்தப் பணிகள் விரைவில் துவங்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

❖ மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

  • கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

❖ பத்து ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் கோவை மாநகரப் பகுதியில் திட்டச் சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் எந்தவொரு திட்டச் சாலைப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

இப்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அந்தப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டிருக்கிறேன். ஐந்து திட்டச் சாலைகளைச் செயல்படுத்துவதற்கும், கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

❖ கோவை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அதற்கு 309 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய சிறைச்சாலை, அது நகரின் வெளியே கொண்டு செல்லப்படும்.

❖ காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக
200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை முறையை மேலும் மேம்படுத்துவதற்காக 11 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

❖ கோவை மாநகர மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ வசதிகளை அளித்திடும் வகையில் 16 கோடி ரூபாய் செலவில், 63 நலவாழ்வு மையங்கள் மற்றும் மூன்று மருத்துவ ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட இருக்கிறது.

❖ கோவை மாநகரப் பகுதியில் சாலை விளக்கு வசதிகள் இல்லாத பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய தெரு விளக்குகள் அமைக்கக்கூடிய பணி செயல்படுத்தப்படவிருக்கிறது.

இப்பணிகளுக்கான அரசு ஆணைகளை விரைவில் வெளியிட்டு - அதற்கான நிதியை விரைந்து ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடித்து நிச்சயமாக அதை மக்களிடத்தில் நாங்கள் ஒப்படைக்க இருக்கிறோம் என்ற உறுதியை உங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் பெருமையோடு இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சென்னை மாநகரப் பகுதி போன்றே, கோவை மாநகரத்தினுடைய வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்காக கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் அற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏதோ அறிவித்தோம் - போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி இதை விரைவுபடுத்துவதற்காகத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, இன்றைக்கு அந்தப் பணிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். அவரும் பல நேரங்களில் ஓய்வெடுக்காமல் உழைக்கக் கூடியவர்தான். அப்படி உழைக்கக் கூடிய ஒருவரைத்தான் இந்த மாவட்டத்திற்குத் தேர்ந்தெடுத்து, உங்களிடத்தில் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். அந்த வகையில் கோவை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக, அனைத்து உட்கட்டமைப்புகளும் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக ஆக்க உறுதி எடுத்திருக்கிறோம்.

“அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையைப் பொறுத்தவரையில் வளம் கொண்ட தொழில் மாவட்டம் ஆகும். பெரிய தொழில்கள் மட்டுமல்ல, சிறுகுறு தொழில்களும் இந்த மாவட்டத்தில் அதிகம். தொழில்கள் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி வருவாய் தரக்கூடிய மாவட்டம் இதுதான். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம். இவை அனைத்துக்கும் மேலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய மாவட்டமும் இந்த கோவை மாவட்டம்தான். இதுபோன்ற தொழில் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய ஆசையும் அதுதான். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான தொழில்கள் உண்டு. அத்தகைய தொழில்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி, சீர்தூக்கி எல்லாவிதப் பணிகளிலும் ஈடுபடுவது என்று அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும்.

நாளை காலை கோவையில் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அப்படி நடைபெறுகிற அந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட இருக்கிறோம். கோடிக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. அதன் மூலமாக இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது.

இதுபோன்ற தொழில் அமைப்புகளின் மாநாடுகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றன. தொழில்துறையை வளர்ப்பதன் மூலமாக மக்களை வளர்க்க முடியும்! மக்களது வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம். அப்படி மாற்றுகிற நேரத்தில் அதில் முதலிடம் கோவைக்குத்தான் உண்டு என்பதைப் பெருமையுடன் நான் சொல்ல விரும்புகிறேன்.

திட்டங்களைப் பற்றித்தான், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிதி ஆதாரத்தைப் பற்றித்தான், அது என்னென்ன கட்டங்களில் நிறைவேற்றப்படவிருக்கிறது என்பதைப் பற்றி சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு சொன்னேனே தவிர, நான் எப்பொழுதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் என்னுடைய பணிகள் இருக்கும். பேச்சைக் குறைத்துச் செயலில் நம்முடைய திறமையைக் காட்டு என்ற பழமொழிக்கேற்ப நிச்சயமாக இந்த மாவட்டம் தமிழகத்திலேயே தலைசிறந்த மாவட்டமாக, எல்லாவற்றிலும் தலைசிறந்த மாவட்டமாக இருக்கிறது என்ற அந்த பெருமையைப் பெறுவதற்கு நாங்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டோம். அப்படி ஆற்றக்கூடிய பணிகளுக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், ஆதரவு தரவேண்டும் என்று கேட்டு, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories