தமிழ்நாடு

"மகிழ்ச்சியாக மக்கள் ஊர் சென்று திரும்ப 34,259 சிறப்பு பேருந்துகள்" : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

சென்னையிலிருந்து 9,806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

"மகிழ்ச்சியாக மக்கள் ஊர் சென்று திரும்ப 34,259 சிறப்பு பேருந்துகள்" : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீபஒளித் திருநாளையொட்டி மக்கள் சொந்த ஊர் சென்று வர 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தீபஒளித் திருநாளையொட்டி, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது கடந்த 11.10.2021-ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திட ஏதுவாக, பல்வேறு சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு, பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 371 பேருந்துகளில், விபத்து மற்றும் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 37 பேருந்துகளை தவிர்த்து, மீதமுள்ள 20,334 பேருந்துகளும், தீபஒளித் திருநாளையொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கிட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். தீபஒளித் திருநாளையொட்டி, கடந்த மாதம் துவங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக நாளது வரையில் 72,597 நபர்கள் முன்வதிவு செய்துள்ளனர்.

பயணிகள் தங்களின் வசதியான பயணத்திற்கு முன்பதிவு செய்து கொண்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில், சிறப்புப் பேருந்துகள் இயக்க நாட்களில் எனது தலைமையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதனைத் தெரித்துக் கொள்கிறேன்.

தீபஒளித் திருநாளையொட்டி, வரும் 01/11/2021 முதல் 03/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீப ஒளித் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 05/11/2021 முதல் 08/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

வழித்தட மாற்றம்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து (கோயம்பேடு) மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories