தமிழ்நாடு

பட்ஜெட் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்திய தி.மு.க அரசு: ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விநியோகிக்க அரசாணை!

ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்திய தி.மு.க அரசு: ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விநியோகிக்க அரசாணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பனை மரம் மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

மேலும், பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும்; பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது விநியோகத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விநியோகம் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர், பனை வெல்லத்தின் பேக்கிங், எம்.ஆர்.பி விலை அச்சிடுதல், பேக்கிங் தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் எண் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பனை வெல்லத்தை விருப்பப்பட்ட பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்; பனைவெல்லத்தை வாங்கியே ஆக வேண்டும் என பணியாளர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உதவியுடன் மாவட்ட மற்றும் தாலுகா மற்றும் கிராமங்களில் விளம்பர பிரச்சாரம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories