தமிழ்நாடு

சென்னையை அதிரவைத்த வழிப்பறி கும்பல்... காட்டிக்கொடுத்த ’வெள்ளை செருப்பு’... 3 பேர் கைது - நடந்தது என்ன?

சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த குற்றவாளிகள் 3 பேரை போலிஸார் கைது செய்தனர்.

சென்னையை அதிரவைத்த வழிப்பறி கும்பல்... காட்டிக்கொடுத்த ’வெள்ளை செருப்பு’... 3 பேர் கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சமீபத்தில், திருவல்லிக்கேணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் 9 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

அதேபோல் அண்ணா சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இதுகுறித்து போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரே குழு அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் போலிஸார் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக ஒரே வாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் பட்டாபிராமை சேர்ந்த கிருபாநந்தன் (19), ஆவடியை சேர்ந்த பால் சிவா (20), அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் எனத் தெரிய வந்தது. மேலும், அவர்கள் செயின் மற்றும் மொபைல் பறிப்பு குற்றவாளிகள் எனத் தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலிஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த 3 நபர்களும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், குமரன் நகர், திருவல்லிக்கேணி, எழும்பூர், துரைபாக்கம், செங்குன்றம், சூளைமேடு, திருவான்மியூர் உள்ள 15க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தங்களுக்கு தெரிந்த இடத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தை பயன்படுத்திவந்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளிகளில் ஒருவர் அனைத்து குற்ற சம்பவங்களிலும் வெள்ளைநிற செருப்புகளை அணிந்திருந்ததை வைத்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளியிடம் அதுகுறித்து கேட்டபோது வெள்ளை செருப்பை பாலித்தீன் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் மறைத்து வைத்திருப்பதாக கூறியதன் பேரில் அங்கு சென்ற போலிஸார் அதனையும் பறிமுதல் செய்தனர்.

இவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories