தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவியதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், கோவில் பூசாரிகள் ஆகியோருக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த பயன்படும் வானங்களை இன்று மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
மேலும், ஏமூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் செந்தல்பாலாஜி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவலை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றே நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி பணி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தில், 6,079 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வாகனம் என ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். இதையடுத்து வெங்கமேடு பெரியகுளத்துப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.