சென்னை வடபழனி முருகன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார் அப்போது, ஆணையர் குமரகுருபரன், தி.நகர் எம்.எல்.ஏ. கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு. "வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தரப்படும். விரைவில் வடபழனி கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும்.
மேலும் மாநிலம் முழுவதும் 12 ஆண்டுகள் ஆகியும் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களை கணக்கெடுத்து, அதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலை ஆகம விதிகளின் படி, பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயில்களில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன்பின் அன்னதான திட்டத்தை தொடருவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மக்களின் பசி பிணி நீக்கும் அமுதசுரபியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். சென்னையில் உணவு இல்லை என்ற நிலை கிடையாது. தேவைப்பட்டால் அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் ஆட்சியாக தி.மு.க இருக்கிறது. ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும். அ.தி.மு.கவில் 4,5 கத்திகள் இருப்பதால் பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால் தி.மு.கவில் ஒரே தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதால், எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் தராமல் கொரோனாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.