தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 35,860 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,66,639 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,61,24,748 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 5,559 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,671 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 3,165 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,954 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,758 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 25,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15,02,537 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 2,84,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 448 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 169 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 279 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 20,046 ஆக அதிகரித்துள்ளது.