திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரானா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனை மற்றும் செரியன் பவுண்டேஷன் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, எளாவூரில், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள அரசு கட்டிடங்களில் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் அமைச்சர் சாமு நாசர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஆவடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை அமையத்தை இன்று அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு கவச உடையணிந்து, கொரோனா நோயாளிகளிடம், சிகிச்சைகள் எப்படி கொடுக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்," திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு விரைவில் கொரானா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்களைக் காக்கும்.
பால் விநியோகம் தட்டுப்பாடின்றி நடைபெறும். அதேபோல் கடைக்கோடி விவசாயிகளிடமிருந்து பால் பெறுவதற்காகவும் இணையவழி சேவை மூலம் பால் வாங்குவதற்கும் வாகன வசதிகள் ஏற்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.