தமிழ்நாடு

"அரசு காப்பீட்டு அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நடவடிக்கை" - தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த அமைச்சர்!

தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

"அரசு காப்பீட்டு அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நடவடிக்கை" - தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நாளை முதல் நிறுவனங்களை மூடுவதாக உறுதி அளித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து வரக்கூடிய சூழ்நிலையில், அவர்களுக்கான நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

மேலும் திருப்பூரில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் புகார் வரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும். அதேபோல், உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு அட்டை வைத்திருந்து அதை ஏற்றுக்கொள்ளாத மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories