சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி சாலை ஓரமாக மரத்தடியில் வாடகை கார் ஓட்டுனர் மணி என்பவர் காரை நிறுத்திவிட்டு சற்று ஓய்வெடுத்த நேரத்தில் அங்கு வந்த பீர்க்கன்கரணை உதவி ஆய்வாளர் சண்முகம் என்பவர் கார் ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி காரை அங்கிருந்து எடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அப்போது “ஆபாச வார்த்தைகள் ஏன் பேசணும்? சொன்னா போகப்போறேன்” என்று கார் ஓட்டுனர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி் ஆய்வாளர் சண்முகம் கார் ஓட்டுனரை கடுமையாக தாக்கிய பிறகும் ஆத்திரம் அடங்காமல் அருகில் உள்ள போலீஸ் பூத் அழைத்து சென்று லத்தியால் அடித்தும் ஷூ காலால் எட்டி உதைத்தும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து, அந்த வழியாகச் சென்ற வாடகை கார் ஓட்டுனர்கள் ஒவ்வொருவரும் தங்களது கார்களை அங்கேயே நிறுத்தி போராட்டம் நடத்தினர். கார் ஓட்டுனரை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட ஓட்டுனர் மணிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர்.
போலிஸார் தாக்கியதால் ஓட்டுனர் கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆப்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டால் போலிஸார் தாக்கியதால் ஓட்டுனருக்கு சிகிச்சை தேவை என்றதும் அவர்கள் தொலைபேசியை துண்டித்துவிட்டனர் என்று கார் ஓட்டுனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் காவல் அதிகாரிகள் கார் ஓட்டுனர்களிடம் சமரசம் பேசினர். கார் ஓட்டுனரை தாக்கிய உதவி் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் போலிஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து பாதிக்கப்பட்ட கார் ஓட்டுனரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கார் ஓட்டுனர்களை போலிஸார் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதே தீர்வாக அமையும் என்று கார் ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.