தமிழ்நாடு

“மருந்து, படுக்கை, ஆக்சிஜன் இல்லை; போன வருடம் ஒருவரி மாறாமல் இதையேத்தான் படித்தேன்” - மனுஷ்யபுத்திரன்

கொரோனா பரவல் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்றினை எழுதியுள்ளார்.

“மருந்து, படுக்கை, ஆக்சிஜன் இல்லை; போன வருடம் ஒருவரி மாறாமல் இதையேத்தான் படித்தேன்” - மனுஷ்யபுத்திரன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட பாதிப்பை விட இரட்டிப்பான வேகத்தில் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதனை ஆளும் ஆட்சியாளர்களும் முறையாக கையாளாததால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன்கள், வென்டிலேட்டர்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில், எழுத்தாளரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா பரவல் குறித்த கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

பேப்பர் போடும் பையனிடம் கத்தினேன்:

" எதற்காக ஓராண்டுக்கு முந்தைய பழைய பேப்பரை போட்டு விட்டுப் போகிறாய்?"

பையன் என்னை பயத்துடன் பார்த்தான்

" இல்லண்ணா

தேதி கூட பாருங்க

இன்னைக்கு தேதிதான்"

" பொய் சொல்லாதே

அதே தலைப்புகள்

அதே செய்திகள்

போனவருடம்

ஒருவரி மாறாமல்

இதையேதான் படித்தேன்..

“மருந்து, படுக்கை, ஆக்சிஜன் இல்லை; போன வருடம் ஒருவரி மாறாமல் இதையேத்தான் படித்தேன்” - மனுஷ்யபுத்திரன்

மருந்துகள் இல்லை

படுக்கைகள் இல்லை

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை

படுக்கைகளாக மாற்றப்படும்

ரயில் பெட்டிகள்

ஊரடங்கு

இரவில் நடமாடக்கூடாது

கடற்கரைகளில் அனுமதி இல்லை

ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளிகள்

தேர்வுகள் தள்ளி வைப்பு

நோயாளிகள் அதிகரிப்பு

சாவு அதிகரிப்பு

மருந்து வாங்கியதில் ஊழல்

வதந்திகளை பரப்பாதீர்கள்

அரசு விரைந்து செயல்பட கோரிக்கை

தடுப்புப் பகுதிகள்

மக்கள் ஒரு போருக்கு தயாராக

பிரதமர் அழைப்பு...

ஒன்றுகூட மாறவில்லை

ஒரு எழுத்துக்கூட மாறவில்லை

நான் இன்னும் எவ்வளவு காலம்

துரதிஷ்டம் பிடித்த

இந்த பழைய பேப்பரை படிக்க வேண்டும்?"

பேப்பர் போடும் பையன்

இன்றைய பத்திரிகையில் வந்திருந்த

ஒரு விளம்பரத்தைக் காட்டினான்

" பாருங்கள்

நாளை அறிமுகமாகப்போகும்

புது மாடல் செல்போன் விளம்பரம்

இப்போதாவது நம்புங்கள்

இது புதுப்பேப்பர்தான் என்று"

எனக்கு குழப்பமாக இருந்தது.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories